(இந்தப் பாடலின் துவக்கத்திலும் முடிவிலும் ஒரு ரகசியம் இருக்கிறது. அது என்ன என்பது மற்றொரு ரகசியம். அதைப் பின்னூட்டத்தில் மட்டுமே சொல்லுவேன் ஒரு வாரத்துக்குப் பின்.)
பார்வையற்ற ஒரு யாசகனான நான் ஊரெல்லாம் உறங்கும் ஓர் நள்ளிரவில் ஆட்களற்ற ஒரு கோயிலின் வாசலில் அமர்கிறேன்.
என் அருகில் இருக்கும் அந்த நாய் சற்றுமுன் ஈன்ற தன் குட்டிகளை அரவணைத்து நாவால் நக்கி நக்கி அவற்றிற்குக் கதகதப்பூட்டிக்கொண்டிருப்பதை என் காதுகளால் உணரமுடிகிறது.எனக்கான அதன் குரலில் தன்னைப் பற்றி என்னிடம் சொல்ல அதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.
குட்டிகளை ஈன்று பெரும் பசியிலும் தாகத்திலும் இன்றைய நாளை அது கழித்திருக்க வேண்டும். எத்தனை கொடுமை பசியின் விஷ நாக்கால் தீண்டப்படுவது என்பதை நான் நன்கறிவேன்.
என் இரவு உணவுக்கென நான் பத்திரப்படுத்தியிருந்த அந்த காய்ந்த ரொட்டியைப் பையில் இருந்து எடுத்து அதற்கு உணவாய் அளித்தேன். நன்றி சொல்லியபடியே பசியின் ஆவலாதியை வெளிப்படுத்தியபடியே உண்டு தீர்த்தது.
மூலையில் கிடந்த வட்டிலில் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி வைக்க அதையும் குடித்து முடித்து என்னை ஒரு முறை நக்கிக் கொடுத்துவிட்டுக் குட்டிகளிடம் சேர்ந்துகொண்டு அவற்றிற்குப் பால் புகட்டத் தொடங்கியது.
பசியும் இரவும் என் மேல் இரக்கமின்றிக் கவிழ மெதுவாய் விரிகிறது ஹரிஹரனின் தர்த் கே ரிஷ்தே. உடன் என் வயிற்றுப் பசி போல உருள்கிறது ஸாகீர் ஹுஸைனின் தபேலா.