30.9.12

நகரவாசியின் தனிமை


இந்தக் கவிதை
அழைப்பு மணியோ 
நாய்க்குரைப்போ
கதவின் க்றீச்சோ
எதுவுமில்லா
வலிந்த நிசப்தம் பற்றியது.

நீரறியாத முல்லைக் கொடிக்கும்
பிரிக்கப்படாத கடிதங்களுக்கும் நடுவே
பின்னப்பட்ட வலை பற்றியது.

மூடப்பட்டே இருக்கும் கதவுகளில்
மோதித் திரும்பும் வௌவால்கள்
மற்றும்
முகவரி தேடியலைபவர்களின்
பதட்டம் குறித்தும்.

தோட்டத்துச் செடிகளின் கதறல் குறித்தும்-
திறக்கப்படாத சாளரங்களின்
மூச்சுத்திணறல் குறித்தும்
பதறுகிறது இந்த வரியில்.

முகம் பார்க்க யாருமற்ற 
கண்ணாடிகளின்
இழந்த வசீகரம் குறித்தும்-

தாம்பத்யமறியாத
மெத்தைகளின் தாபம் குறித்தும்
பரிதவிக்கிறது.

தாழிடாத அறைக்குளியலில்
கரையும் தனிமை குறித்தும்-

ஆடைகள் அணியத்
தேவையற்றவனின்
உதிரும் நிர்வாணம் குறித்தும்
உருகிச் சரிகிறது.

யாரென்றே இந்தக் கவிதையாலும்
கண்டுபிடிக்கமுடியாத-
அடர்கருப்புத் தாள் ஒட்டப்பட்ட
வாகனத்தில் பின்னிரவில் வந்து
அதிகாலை தொலைந்துவிடும்

மற்றொரு ஒற்றை நகரத்துவாசியின்
தனிமை மட்டுமின்றி
வாழ்க்கை பற்றியதும் கூட.

நன்றி - இனிய உதயம் - அக்டோபர் 2012.

28.9.12

வணிக மையத்தில் ஒரு ப்யானோ கலைஞன் - பாவ்லோ கோயெலோ - 5 -


பல நேரங்களில் நான் எழுதுவதை யாரெல்லாம் கவனிக்கிறார்கள், படிக்கிறார்கள், என்ன பின்னூட்டமிடுகிறார்கள், எழுதும் போது நமக்குள் கரைந்துபோகும் இந்த அனுபவம்  அவர்களுக்கு என்ன மாதிரியான உணர்வைக் கொடுக்கும் என்றெல்லாம் எழுதிக்கொண்டிருக்கும் போது ஒரு சரடு போல உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். எழுதிமுடித்தவுடன் அது மறந்து போய்விடும். அதற்குப் பின் என்றோ ஒரு நாள் படிக்க நேரும்போது இதை நாம் எழுதினோமா என்ற சந்தேகமே வந்துவிடும். எழுத்தின் வசீகரமும், போதையும் அதுதான்.

இந்த அனுபவத்தைத் தூக்கிச் சாப்பிடும் புதிய போதனையைப் புகட்டுகிறது பாவ்லோவின் இந்த அனுபவம்.

வணிக மையத்தில் ஒரு ப்யானோ கலைஞன் (The Pianist in the Shopping Mall) 

ஹங்கேரியில் பிறந்து, இன்றைக்கு உலகளாவிய இரு இசைக்குழுக்களில் முக்கியமான ஒரு புள்ளியான என் நண்பியும், வயலின் கலைஞருமாகிய உர்சுலாவுடன் ஒரு வணிக மையத்தில் இங்குமங்குமாக அலைந்துகொண்டிருந்தேன். திடீரென்று அவள் என் கையைப் பற்றினாள்:

“ கவனி!”

நான் கவனித்தேன். இளையவர்களின் குரலோசை, ஒரு குழந்தை கத்தல், மின் சாதனங்களை விற்கும் கடைகளின் தொலைக்காட்சிகளின் இரைச்சல், டைல் பாவிய தரையில் ஹைஹீல்கள் உண்டுபண்டும் க்ளிக் சத்தம், உலகத்திலுள்ள எல்லா வணிக மையங்களிலும் இசைக்கப்படும் தவிர்க்கமுடியாத இசை- எல்லாவற்றையும் கேட்டேன்.

“அற்புதமாக இருக்கிறதில்லையா?”

அற்புதமானதோ அபூர்வமானதோ என் காதுகளுக்கு எட்டவில்லை என்றேன்.

“அந்தப் ப்யானோ. அதை இசைப்பவன் அசர அடிக்கிறான்” என்றாள் என்னை ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டே.

“ஏதாவது பதிவு செய்யப்பட்டதாக இருக்கும்”

“உளறாதே”

இன்னும் உன்னிப்பாக உற்றுக் கேட்டபோது, உண்மையிலேயே அந்த இசை அப்போது இசைக்கப்பட்டுக்கொண்டிருப்பதுதான் என்பதை உணர்ந்தேன். அந்தக் கலைஞன் சோப்பினின் (Chopin) சொனாட்டாவை வாசித்துக்கொண்டிருந்தான். இப்போது என்னால் கவனம் செலுத்தமுடிந்தது. அந்த இசைக் குறிப்புகள் (Notes), எங்களைச் சூழ்ந்திருந்த மற்றெல்லா சப்தங்களையும் மறைத்திருந்தது. மக்கள் நிரம்பிவழிந்த நடைபாதைகளையும்,  கடைகளையும், பேரங்களையும், அறிவிப்புக்களில் கூவிக்கொண்டிருந்த - என்னையும் உங்களையும் நீக்கி- எல்லோரிடமும் இருக்கக்கூடிய பொருட்களையும் கடந்தோம். உணவுக்கூடத்தை அடைந்தோம். சாப்பிட்டுக்கொண்டும், பேசிக்கொண்டும், விவாதித்துக்கொண்டும், செய்தித்தாள் வாசித்துக்கொண்டும் இருந்தவர்களுக்கு மத்தியில் எல்லா வணிக மையங்களும் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர ஏற்பாடு செய்யும் ப்ரத்யேகமான நிகழ்ச்சியும் ஒன்றும் இருந்தது.

 சிறப்பான அந்த ஏற்பாடுதான் ப்யானோவும், அந்தக் கலைஞனும்.

அந்த இசைக்கலைஞன் மேலும் சோப்பினின் இரண்டு சொனாட்டாக்களை வாசித்துவிட்டு, ஷூபேர்ட் (Shubert) மற்றும் மோத்ஸார்ட்(Mozart)டின் கீர்த்தனைகளை வாசித்தான். அவனுக்கு வயது முப்பதுக்குள் இருக்கலாம். மேடையில் அவனுக்குப் பின்னால் இருந்த சுவரொட்டி, அவன் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான ஜ்யார்ஜியாவைச் சேர்ந்த ப்ரபலமான இசைக் கலைஞன் என்பதைச் சொன்னது. அவன் ஏதாவது வேலையைத் தேடியலைந்து, எல்லாக் கதவுகளும் மூடப்பட்டு, விரக்தியின் உச்சத்தில்  இப்போது இந்த இடத்தை அடைந்திருக்கவேண்டும்.    

அப்படியான போதும் உண்மையிலேயே அவன் இங்கில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த இசை பிறக்கும் மாய உலகத்தில் அவன் கண்கள் நிலைத்திருக்கின்றன. அவன் கைகள் நம்முடன் அவன் அன்பை - அவன் ஆன்மாவை -  அவன் உற்சாகத்தை - அவனின் சாரத்தை - இத்தனை நாள் அவன் கற்றறிந்தவற்றை - கவனத்தை - ஒழுக்கத்தை பகிர்ந்து கொண்டன.

ஒருவர் -நிச்சயமாக ஒருவர் -கூட அவன் இசையைக் கேட்க அங்கில்லை என்கிற ஒரு விஷயத்தை மட்டும் அவன் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் போயிருந்ததெல்லாம், அங்கே ஏதாவது வாங்கவோ- சாப்பிடவோ - வெறுமனே நேரத்தைக் கழிக்கவோ - வேடிக்கை பார்க்கவோ - அல்லது நண்பர்களைச் சந்திக்கவோதான். சிலர் எங்கள் அருகில் நின்று உரக்க ஏதாவது பேசிவிட்டு நகர்ந்தார்கள். 

அந்த ப்யானோக் கலைஞன் இதையெல்லாம் சட்டை செய்யாமல் மோத்ஸார்ட்டின் தேவதைகளோடு உரையாடிக்கொண்டிருந்தான். அவன் இசையை ரசித்துக்கொண்டிருந்த இருவரைப் பற்றியுமோ, அதில் ஒருவர் கண்களில் நீர் வழிய அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு அசாத்யமான வயலின் கலைஞர் என்பதையோ  கூட அவன் லக்ஷியம் செய்யவில்லை.

ஒருதடவை தேவாலயத்துக்குப் போயிருந்த போது, ஒரு இளம்பெண் கடவுளுக்காக இசைத்துக்கொண்டிருந்தது என் நினைவுக்கு வந்தது. ஒரு ஆலயத்தில் இசை என்பதாவது பொருத்தமாக இருந்தது. இங்கோ யாரும் - ஏன் கடவுளே கூட - அதை ரசிக்கவில்லை.

இல்லை. அது பொய். கடவுள் கேட்டுக்கொண்டிருந்தார். தன்னை யாராவது கவனிக்கிறார்களா இல்லையா என்றோ, இதற்காகத் தனக்குத் தரப்படவுள்ள சன்மானத்தைக் குறித்தோ கூட அக்கறையின்றி, தன்னின் மிகச் சிறந்த இசையை இசைத்துக்கொண்டிருக்கும் அவன் ஆன்மாவில், அவன் கைகளில் கடவுள் நிறைந்திருந்தார். அவனோ மிலனில் உள்ள ஸ்காலா(Scala)விலோ, பேரிஸ்(Paris)ல் உள்ள ஆபெரா(Opera)விலோ தான் வாசிப்பதான பாவனையுடன் இசைத்துக்கொண்டிருந்தான். இதுவே தன் விதி, தன் ஆனந்தம், தன் வாழ்தலுக்கான காரணம் என்பது போல இசைத்துக்கொண்டிருந்தான். 

இந்தத் தருணத்தில் - நம் ஒவ்வொருவருக்கும் நமக்கேயான ஒரு அட்டவணை ஒன்றிருக்கிறது. அது மட்டும்தான் - என்ற ஒரு முக்கியமான மிக முக்கியமான போதனையை நினைவு படுத்திக் கொண்டிருந்த அந்த இளைஞனின் மேல் எனக்குள் வார்த்தைகளில் அடங்காத மதிப்பும், மரியாதையும் நிரம்பியிருந்தது. நாம் செய்வதை பிறர் ஆதரிக்கிறார்களா, விமர்சிக்கிறார்களா, மறந்துபோகிறார்களா, நம்மோடு வருகிறார்களா என்றெல்லாம் கவனிக்கத் தேவையில்லை. அதை நாம் செய்வதற்குக் காரணம் அதுதான் இந்த பூமியில் நம் விதி அல்லது ஆனந்தத்தின் ஊற்றுக்கண்.  

மோத்ஸார்ட்டின் இன்னொரு சங்கதியை இசைத்துவிட்டு, முதன்முறையாக எங்கள் வருகையைக் கவனித்தான் அந்த ப்யானோக் கலைஞன். எங்களைப் பார்த்து கண்ணியமாக, பணிவாக ஒரு தலையசைப்பு. அதை ஏற்று பதிலுக்கு நாங்களும் தலையசைத்தோம். பின்பு தன்னுடைய சொர்க்கத்துக்கு அவன் திரும்பிவிட்டான். 

இந்த உலகத்தின் கவனிப்பாலோ - கூச்சத்தில் தோய்ந்த எங்களின் கைதட்டல்களாலோ அவனைத் தொந்தரவு செய்யாதிருப்பது நல்லது. எங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அவன் தெரிந்தான். எப்போதெல்லாம் நாம் செய்துகொண்டிருப்பதைக் கவனிக்கக் கூட யாருமில்லையே என்றெண்ணுவோமோ, அப்போதெல்லாம் அந்த ப்யானோ கலைஞன் நம் நினைவுக்கு வரட்டும். அவன் தன் இசை மூலம் கடவுளோடு உரையாடிக்கொண்டிருந்தான். வேறெதுவும் அவசியம் இல்லை அவனுக்கு.

27.9.12

ஒரு பட்டத்தின் முக்யத்வம் - பாவ்லோ கோயெலோ - 4 -


ஒரு பட்டத்தின் முக்யத்வம் (The Importance of a Degree):

ஃப்ரான்ஸின் ஒரு சிறிய கிராமத்தில், என்னுடைய பழைய ஆலை இருந்தது. பக்கத்தில் இருக்கும் ஒரு பண்ணையையும் என் ஆலையையும் வரிசையாக நிற்கும் மரங்கள்தான் பிரித்தன.

ஒரு நாள் என் அண்டைவீட்டுக்காரர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கு அநேகமாக எழுபது வயதிருக்கும். அவரும், அவருடைய மனைவியும் வயல்களில் வேலை செய்வதைச் சில தடவைகள் பார்த்திருக்கிறேன். இப்போது வயல்வேலைகளை நிறுத்திவிட்டார்கள்.

அவர் ஒரு இனிமையான மனிதர். ஆனால் அவருடைய கூரைகளில் என் மரத்தின் இலைகள் விழுந்துகொண்டே இருப்பதால் மரங்களை வெட்டிவிடுமாறு சொன்னார்.

எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. தன் முழு வாழ்நாளையும் இயற்கையுடன் நெருக்கமாகச் செலவழித்த ஒரு மனிதர், ஒருவேளை அடுத்த பத்து வருஷங்களில்  வரப்போகிற ஒரு ப்ரச்சனைக்காக, வெகு காலமாக வளர்ந்திருந்த இவற்றை எப்படி அழிக்கச் சொல்லமுடியும்?

அவரைக் காஃபிக்காக அழைத்தேன். அவரின் கூரையில் விழும் இலைகள் ( எப்படியானாலும் காற்றாலும், கோடைக்காலத்தாலும் அகற்றப்பட்டுவிடும் ) ஏதாவது சேதத்தை உண்டுபண்ணுமானால் புதிய கூரைக்கான செலவை நான் ஏற்பதாகவும், அதற்கான பொறுப்பு முழுவதும் என்னுடையது என்றும் சொன்னேன். அதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், அந்த மரங்களை வெட்டிவிடுவதையே விரும்புவதாகவும் சொன்னார் அண்டைவீட்டுக்காரர். எனக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. அவரின் பண்ணையைக் கூட வேண்டுமானால் வாங்கிக்கொள்வதாகவும் சொன்னேன்.

“ என் நிலம் விற்பனைக்கு அல்ல “ என்றார் அந்த மனிதர்.

“ அந்தப் பணத்தில் நகரத்தில் அழகான ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு, கடும் பனிக்காலத்தாலோ விவசாயம் பொய்த்துப்போகுமோ என்ற கவலையில்லாமலோ உங்கள் மனைவியுடன் மீதி நாட்களைக் கழிக்கலாமே”

“என் பண்ணையை விற்பதாக இல்லை. நான் பிறந்ததும், வளர்ந்ததும் இந்த மண்ணில்தான். எனக்கும் வயதாகிவிட்டதால் இதை விட்டுப் போக மனமில்லை”

நாம் நகரத்திலிருந்து ஒரு நிபுணரை வரவழைப்போம். இந்த விஷயத்தை அவர் பரிசீலித்து ஒரு முடிவு சொல்லட்டும். நமக்குள் ஒருவர் மீது ஒருவர் கோபப்பட வேண்டாம். என்ன இருந்தாலும் நாமெல்லாம் அண்டைவீட்டுக்காரர்கள் இல்லையா என்று யோசனை சொன்னார்.

அவர் கிளம்பியபின் பூமித்தாயை மதிக்காதவர் எனவும், மழுங்கிய புத்திக்காரர் எனவும் அவரின் மேல் முத்திரை குத்தினேன். அவர் நிலத்தை விற்க மறுக்க என்ன காரணம்? என்றறிய எனக்குள் ஆர்வமாக இருந்தது. அதன் காரணம் அவர் வாழ்க்கையில் நிலைத்திருப்பது ஒரே ஒரு கதைதான் என்பதும், அதை மாற்ற என் அண்டைவீட்டுக்காரர் விரும்பவில்லை என்பதும்தான் என்று அன்றைய நாளின் முடிவில் உணர்ந்தேன். ஒரு நகரத்தில் வாழ்வது என்பது முன்பின் அறிந்திராத, வெவ்வேறுவிதமான சூழல்களிலும் மதிப்பீடுகளிலும் தன்னை மூழ்கடித்துக்கொள்வது என்பதனாலும், தான் அவற்றை எல்லாம் கற்றுக்கொள்ளும் வயதைக் கடந்துவிட்டதாகவும் அவர் நினைத்திருக்கலாம்.

இது என் அண்டை வீட்டுக்காரருக்கு மட்டுமேயான ப்ரத்யேகமானதா? இல்லை. இதுபோல எல்லோருக்கும் நிகழலாம். சில சமயங்களில், நாம் நமக்குப் பழக்கமான வாழ்க்கையோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டு, அற்புதமான சந்தர்ப்பங்களைத் - அவற்றோடு எப்படி நம்மை இணைத்துக்கொள்வது என்றறியாமல் - தவிர்த்துவிடுகிறோம். இவரைப் பொறுத்தவரையில் அவரின் பண்ணையும், அந்தக் கிராமமும் அவருக்குப் பரிச்சயமானவை. அவற்றை மீறி வேறெந்த ஆபத்தையும் விலைக்கு வாங்குவதில் அர்த்தமில்லை. நகரத்தில் வாழும் மக்கள் அனைவரின் நம்பிக்கையுமே ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டம், திருமணம், குழந்தைகள், அவர்களும் பட்டம் பெற்றுவிடுதல் என்று ஒரேமாதிரியாய் உழல்வதில்தாகத்தான் இருக்கிறது. யார் ஒருவரும் “ நான் புதிதாய் வேறேதாவது செய்துபார்க்கலாமா?” என்று தங்களைக் கேட்டுக்கொள்வதில்லை.

தன் மகள் சமூகவியலில் ஒரு பட்டம் வாங்கிவிடுவதற்காக இரவுபகலாக உழைத்த என் நாவிதரை எனக்கு நினைவிருக்கிறது. அவளும் கடைசியில் பட்டம் பெற்று விட்டாள். பல கதவுகளைத் தட்டி அலுத்துப்போய், ஒரு சிமெண்ட் ஆலையில் காரியதரிசியாக வேலையில் அமர்ந்தாள். ஆனபோதும் என் நாவிதர் பெருமையோடு “என் மகள் பட்டம் பெற்றுவிட்டாள்” என்று சொல்லிக்கொள்வார்.

என் அநேக நண்பர்கள், அவர்களின் குழந்தைகள் எல்லோருமே பட்டம் பெற்றவர்கள். அதற்காக அவர்கள் விரும்பிய விதத்தில் அவர்களின் பணிவாழ்க்கை அமைந்துவிட்டது என்று பொருள் இல்லை. நிச்சயமாக இல்லை. ஒரு காலத்தில், பல்கலைக்கழகங்கள் அவசியமானதாக இருந்த காலத்தில், இந்த உலகத்தில் முன்னேறுவதற்கு ஒருவர் பட்டம் பெறவேண்டும் என்று யாரோ ஒருவர் சொல்லியிருக்கக் கூடும். இந்த விதமாகத்தான் உலகம் அபாரமான தோட்டக்காரர்களையும், ரொட்டி சமைப்பவர்களையும் (bakers), பழங்காலப் பொருட்கள் சேகரிக்கும் வியாபாரிகளையும் (antique dealers), சிற்பிகளையும், எழுத்தாளர்களையும் இழந்துபோயிருக்கிறது. அநேகமாக இந்தச் சூழலை மறுபரிசீலனை செய்ய இதுதான் தருணம். மருத்துவர்களும், பொறியாளர்களும், விஞ்ஞானிகளும், வழக்கறிஞர்களும் பல்கலைக்கழகங்களுக்குப் போய்த்தான் ஆக வேண்டும். அதற்காக எல்லாருமேயா?

ராபர்ட் ஃப்ராஸ்டின் இந்த வரிகள் சொல்லும் பதிலை இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்.

Two roads diverged in a wood, and I-
      I took the one less travelled by,
And that has made all the difference.

இரு வேறு சாலைகள்
பிரியும் புள்ளியில்
யாரும்
அதிகம் பயணிக்காத
பாதையை நான்
தேர்ந்தெடுத்தேன்.
யாரும் அடைந்திராத
இலக்கை
அது பரிசளித்தது.

என் அண்டை வீட்டுக்காரர் கதையைச் சொல்லிவிடுகிறேன். அந்த நிபுணர் வந்தார். எந்த ஒரு மரமும் மற்றவரின் சொத்தின் எல்லையிலிருந்து மூன்று மீட்டர் இடைவெளியுடன் நடப்பட்டிருக்கவேண்டும் என்ற எதிர்பாராதபடியான ஒரு ஃப்ரென்ச் சட்டத்தைச் சுட்டிக் காட்டினார். நான் நட்டிருந்தவை இரண்டு மீட்டர் இடைவெளியில் இருந்ததால் எல்லா மரங்களையும் வெட்டும் படியாயிற்று.

26.9.12

இமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம் - 4 - இசைக்கவி ரமணன்

ஹரித்வாரா? ஹரத்வாரா? அது ஹர் த்வார்; எனில், அனைத்துக்கும் வாயில். பத்ரி, கேதார் மட்டுமின்றி, ரிஷிகேஷிலிருந்து துவங்கிப் பலப்பல திருத்தலங்களுக்குத் தலை வாசலாக விளங்குகிறது ஹர் த்வார். (ஹர்- அனைத்துக்கும்; த்வார்- வாயில்). எத்தனையோ அமைப்புகளின் ஆச்ரமங்கள்   உள்ளன. தங்குவதற்குக் கணக்கற்ற விடுதிகள் உள்ளன. கட்டணங்கள் மலிவுதான். ஏராளமான உணவு விடுதிகள். ஆலு பராட்டாவும் தயிரும், சுடச்சுட குலாப் ஜாமுனும் ஆஹா!

எத்தனையோ படித்துறைகள் இருந்தாலும் ’ஹர் கி பௌடி’ அதாவது ‘ஹரியின் பாததூளி’ என்னும் கட்டம் மிகவும் பிரசித்தியானது. கட்டவிழ்ந்து ஓடும் கங்கை, யாத்ரிகளின் வசதிக்காகத் தேக்கித் திருப்பிவிடப்பட்டிருக்கிறது. பழைய மணிக்கூண்டு அலங்கரிக்கும் ஒரு நீளத் திடல் கங்கையை இரண்டாகப் பிரிக்கிறது. இடப்புறம், பிரம்ம தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.

அங்கே பெரும்பாலும் இறந்தவர்களுக்கான சடங்குகள் செய்கிறார்கள். பண்டாக்கள் பிடுங்கித் தின்கிறார்கள் என்பதெல்லாம் பொய். க்ரெடிட் கார்ட், செல் கம்பெனிக்காரர்களைக் காட்டிலும் எதுவும் கொடுமையாக இல்லை. அவரவர் வசதிக்கேற்பச் சடங்குகள் செய்து கொள்ளலாம். பாதையிலிருந்து இறங்கிப் படித்துறைக்குச் செல்ல வேண்டும்.

எப்போதும் கூட்டமாக இருக்கும் குறுகிய சாலைகள். திடீரென்று மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய், மக்கள் முகங்களில் பீதி கலந்த பிரகாசம். என்னவென்று பார்த்தால், பிரும்மாண்டமான குரங்குகள் சாரிசாரியாக மட்டுமின்றி, ஜோடிஜோடியாகக் கைகோர்த்துக்கொண்டு சாலையைக் கடந்து கொண்டிருந்தன. யாரும் சத்தம் போடக்கூடாது என்று எச்சரித்தார்கள்! அவசியமற்ற எச்சரிக்கை. எவன் வாயைத் திறப்பான்? குரங்குகள் நம்மைக் கவனித்ததாகவே தெரியவில்லை.

வழியெங்கும் பிச்சை கேட்கிறார்கள். சாதுக்கள் அமர்ந்திருக்கிறார்கள். பார்வை சந்தித்தால் பார்வையாலே பிச்சை கேட்கிறார்கள். பாரதியின் அச்சமில்லை பாட்டில், ‘பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்’ என்றொரு வரி வருகிறது. நம் நாட்டில், பிச்சையெடுத்தல் இரண்டு விதம். முதல் ரகத்திற்குப் பெரும்பாலும் வறுமையே காரணம்; சோம்பலே காரணம் என்று நினைக்காதீர்கள்! வீட்டை விட்டு ஏதோ காரணத்தினால் விலக்கப்பட்டவர்கள் அல்லது வெளியேறியவர்களும் இதில் உண்டு.

பிச்சை போடுவதால்தான் அது வளர்கிறது. அதை நாம் ஊக்குவிக்கக் கூடாது, அது ஒரு எத்து வேலை என்றெல்லாம் அறிவார்ந்த போதனைகள் அன்றாடம் கேட்கிறோம். கூட்டம் போடுவோம். கூடி விவாதிப்போம், சட்டங்கள் இயற்றுவோம். அதற்கு முன்னால், நீட்டிய கரத்தில் காசோ சோறோ துணியோ போட்டு விடுவோம். இரப்பாரைக் காட்டிலும் இடாதாரே ‘சிறுகுலத்தோர்’ அல்லவா?

இன்னொரு ரகம் சன்னியாசம். துறவு, பொதுவாய் இருவகைப்பட்டது. ஒன்று, வைராக்கியம் ஏற்பட்டபின் மேற்கொள்ளப்படும் துறவு. இன்னொன்று, வைராக்கியம் ஏற்படுவதற்காக மேற்கொள்ளப்படும் துறவு. இந்த இரண்டு ரகத்தாரையும் நம் நாட்டின் திருத்தலங்களில் காணலாம். ஒரு காலத்தில், அரசர்கள் ஒரு கட்டத்தில், ஆட்சிப் பொறுப்பை மகனுக்கோ (தகுதியுடையவனாய் இருந்தால்) அல்லது பொறுப்புள்ள ஒருவருக்கோ தந்துவிட்டுத் தவம் புரியச் செல்வார்கள். அரண்மனையை விட்டுவிட்டு ஆரண்யம் புகுவார்கள். செல்வத்திலும், சிறப்பிலும் இருந்தவர்கள் வலிந்து வறுமையைத் தழுவுவார்கள். அப்படிப்பட்ட ஒரு மனப்பாங்கின் தாக்கத்தை இன்றும் - கவனித்தால் - காணலாம்.

ஹர்த்வாரில், சாதுவுக்குத் தங்க இடமோ, உண்ண உணவோ பிரச்சினையில்லை. ஒவ்வோர் ஆச்ரமத்திலும் மூன்று மூன்று நாட்கள் தங்கிக்கொள்ளலாம். மடங்களும், சத்திரங்களும் உள்ளன. பலவிடங்களில், படித்துறையிலேயே இலவசமாக ரொட்டி வழங்குகிறார்கள். போதாதா?

ஒரு டீக்கடைக்குப் பின் உட்கார்ந்திருக்கிறேன். கங்கையில் கால் நனைத்தபடி. மாலை நேரம். பளபளக்கிறாள். ஆடிக்கொண்டிருக்கும் என் கால்களுக்குத் தங்கக் கொலுசு போட்டு மகிழ்கிறாள். எதையும் விழையாத ஒரு மனோபாவம்; தேவைகள், கோரிக்கைகள் யாவும் தீர்ந்து போன நிம்மதியில் நேர்ந்த வினோதக் களைப்பு; எக்களிப்பற்ற ஏகாந்தம். மெல்ல மெல்ல, வானும், கரைகளும், படித்துறைகளும், நகரின் விளக்குகளும், மக்களும், அரவங்கள் அத்தனையும் மெல்ல மெல்ல மங்கி மறைகின்றன. வெட்டவெளியில் நிலைகுத்திப்போய், பார்வை செயற்படாத கண்களின் எதிரே, கற்றை மின்னலும் ஒற்றை நிலவும் குலவி நெய்த எழிலோவியமாய் எதிரே கங்கை எழுந்து நிற்கிறாள். பார்வை வரவர, பனிப்பாதை வளைவின் புகைச்சுருளாய்ப் புன்னகைத்துக் கரைகிறாள். நான் கண்பனித்துக் கரைகிறேன்.

(தொடரும்)

24.9.12

விடியும் தருணம் - பாவ்லோ கோயெலோ - 3-

பாவ்லோ கோயெலோ தாவோஸ் உச்சிமாநாட்டில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி எழுதிய குறிப்பு இன்றைக்கு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விடியும் தருணம். 

தாவோஸில் நடந்த உலகப் பொருளாதார உச்சிமாநாட்டின் போது அமைதிக்கான நோபெல் விருது பெற்ற ஷிமோன் பெரெஸ்(Shimon Peres- שמעון פרס ) ஒரு குட்டிக்கதை சொன்னார்.

ஒரு Rabbi (யூத துறவி ) அவருடைய சீடர்களுடன் உரையாடுகையில் அவர்களிடம் கேட்டார்:

“ இரவு முடிந்து உதயமாகும் அந்தச் சரியான தருணத்தை எப்படி நாம் அறிந்துகொள்ளலாம்?”

”ஒரு நாய்க்கும் ஆட்டுக்கும் வித்யாசம் காட்டக்கூடிய ஒளி வந்த நேரம்” என்றான் ஒரு சீடன்.

“ இல்லை. ஃபிக் மரத்துக்கும், ஆலிவ் மரத்துக்குமான வேற்றுமை தெரியக்கூடிய தருணம்” என்றான் இன்னொரு சீடன்.

“அதுவும் சரியான தருணம் அல்ல”

“அப்படியானால் எதுதான் சரியான தருணம்?” என்று கேட்டார்கள் சீடர்கள்.

அந்தத் துறவி சொன்னார்:

“ எப்போது ஓர் அறிமுகமில்லா அந்நியன் நம்மை அணுகும்போது அவனை நம் சகோதரனாக நாம் நினைக்கிறோமோ, எப்போது எல்லா சிக்கல்களும் மறைகிறதோ, அந்தத் தருணத்தில்தான் இரவு மறைகிறது. உதயம் மலர்கிறது.”

23.9.12

ஒரு ஆஸ்ட்ரேலியரும் தினசரி விளம்பரமும் - பாவ்லோ கோயெலோ - 2


இந்தக் குறிப்புகள் மற்றும் கதைகள் அவர் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் எழுதியவை. இவை பல்வேறு பத்திரிகைகளில் போர்ச்சுக்கீஸிய மொழியில் வெளியானது.

அவரின் எழுத்துக்களில் தொனிக்கும் தத்துவச் சுவை தனித்தன்மையானது. வாக்கியங்களின் அமைப்பில் எளிமை, சிக்கனம் இவரின் மற்றொரு அற்புதம்.

இன்றைக்கு நான் மொழிபெயர்த்த இந்த சிந்தனையின் வீச்சை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்:

ஒரு ஆஸ்ட்ரேலியரும் தினசரி விளம்பரமும்:

ஸிட்னி துறைமுகத்தில் நகரத்தின் இருபகுதிகளை இணக்கும் அழகான பாலத்தை நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு ஆஸ்ட்ரேலியர் கையில் ஒரு செய்தித்தாளுடன் என்னிடம் வந்து, அதில்  வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தை என்னை வாசிக்கச்சொன்னார்.

“எழுத்து மிகவும் சிறியதாக இருக்கிறது. என்ன அச்சிட்டிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை” என்றார்.

நானும் முயற்சித்துப் பார்த்தேன். ஆனால் நானும் என் கண்ணாடியை எடுத்துவர மறந்திருந்தேன். அவரிடம் இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தேன்.

“ ஓ! அதனால் பரவாயில்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா? கடவுளுக்கும் பார்வைக்கோளாறு இருக்கிறது. அவர் முதியவராகி விட்டதால் அல்ல. ஆனால் அப்படிக்காட்டிக்கொள்ளத்தான் அவர் விரும்புகிறார்  என நினைக்கிறேன். அதனால்தான், யாராதொருவர் ஏதாவது ஓர் தவறிழைத்தால் அதைத் தன்னால் சரியாகப் பார்க்கமுடியவில்லை. அதனால் அவரை மன்னித்துவிடுகிறேன் என்று சொல்லித்தப்பித்துக் கொண்டு விடுகிறார். அவரின் முடிவு அநீதியாய்ப் போவதை அவர் விரும்புவதில்லை” 

“ அப்படியானால், யாராவது ஏதாவது நல்லது செய்யும்போது?”

அந்த ஆஸ்ட்ரேலியர் சிரித்தபடியே “ கடவுள் ஒரு போதும் தன் கண்ணாடியை வீட்டில் மறந்து வைத்து விட்டு வருவதில்லை” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

22.9.12

மனிதர்களின் வேடிக்கையான குணம் - பாவ்லோ கோயெலோ- 1-


பாவ்லோ கோயெலோ. ( Paulo Koelho ) 

ப்ரஸில் நாட்டில் பிறந்து ’ரியோ-ஜி-ஜனையோ’ வில் வசிக்கும் போர்ச்சுக்கீசிய மொழியில் சாகசங்கள் புரியும் அற்புதமான எழுத்தாளர். என் எழுத்தின் வேர்களை இவரிடமும் நான் பெற்றதுண்டு. இவரின் இடது கண் லேசான கவர்ச்சி.

அவரின் ”அல்கெமிஸ்ட்” உலகத்தையே இவர் பக்கம் திருப்பியது. வாசிக்காதவர்கள் தயவு செய்து வாசிக்கவும். தமிழில் "ரசவாதி" என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுதும் அதிகம் பேர்களால் வாசிக்கப்படும் எழுத்தாளர் நல்ல எழுத்தை எழுதுபவராக இருக்க முடியாது என்ற சூத்திரத்தை மறுபடியும் உடைத்த மற்றுமொரு எழுத்தாளர்.

இவரின் மற்ற புத்தகங்கள்- The Pilgrimage, The Valkyries, By the River Piedra I Sat Down and Wept, The Fifth Mountain, Veronika Decides to Die, The Devil and Miss Prym, Manual of theWarrior of Light, Eleven minutes, The Zakir.

அவரின் ”நீந்தும் நதியைப் போல” ( Like the Flowing River ) என் தினசரிக் கொறித்தலுக்கு கையெட்டும் தொலைவிலேயே வைத்திருக்கும் ஒரு புத்தகம். இதன் வடிவம் எனக்கு மிகவும் பிடித்தமானது. நான் ஃபிக்‌ஷனல் உரைநடை என் விருப்பங்களில் ஒன்று.

இனி அவரின் “நீந்தும் நதியைப் போல” தரும் அனுபவங்களை உங்களுக்காக மொழிபெயர்க்கலாம் என்று தோன்றியது.

நேரம் வாய்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு தலைப்பு.

மனிதர்களின் வேடிக்கையான குணம்:

ஒரு மனிதன் என் நண்பன் ஜேம் கோஹெனிடம் கேட்டான்:

“மனிதர்களின் குணாதிசயங்களிலேயே விசித்ரமானது எது?”

கோஹென் சொன்னான்:

“ நம்முடைய முரண்பாடுகள்தான்.

சின்ன வயதில் வளர மிகவும் அவசரப்படுவோம்.

வளர்ந்தபின், இழந்துபோன பிள்ளைப் ப்ராயத்தை நினைத்து ஏங்குவோம்.

பணம் சம்பாதிக்க நமது நலத்தை வருத்திக்கொள்வோம்.

சம்பாதித்தபின் அது முழுவதையும் நம் உடல்நலத்தைச் சரி செய்து கொள்வதற்காகச் செலவிடுவோம்.

சதாகாலமும் எதிர்காலத்தைப் பற்றியே யோசித்து நிகழ்காலத்தைத் துறந்து விடுவோம்.

ஆக நமக்கு நிகழ் காலமும் தெரியாது. எதிர்காலமும் புரியாது.

வாழும்போது ஒருபோதும் இறக்கப் போவதில்லை என்பது போல வாழ்கிறோம்.

சாகும்போதோ ஒரு நாளும் வாழாதிருந்து விட்டது போல செத்துப் போகிறோம்.”

21.9.12

பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதிமணி.


சில நேரங்களில் சில மனிதர்களின் நினைவு இந்தப் புத்தகம் வாங்கும்போது நிச்சயமாக வரும். வர வேண்டும். இங்கிருந்தே ஆரம்பிக்கிறது தன் மறக்கமுடியாத முதல் புத்தகத்தை எழுதிய பாரதிமணியின் சுவடு.

நான் முதன்முதலில் 1985ல் க.நா.சு.வைச் சந்தித்த போது அவரின் வயது 73. எனக்கு 20. எனக்கும் என் தாத்தாவுக்குமான இடைவெளி. தில்லியில் உள்ள தன் மகள், அவரின் 47 வயது மாப்பிள்ளையைப் பற்றி, தஞ்சாவூர் ப்ரகாஷிடம் அவர் ப்ரஸ்தாபிக்கும் போது, நான் ஒருபோதும் சந்திக்க வாய்ப்பே இல்லாத ஒருவராகவே பாரதிமணி தோன்றினார்.  

இப்போது 2012ல் நான் பாரதிமணியைச் சந்திக்கும்போது அவரின் வயதும் 73. எனக்கு 47. எனக்கும் என் அப்பாவுக்குமான இடைவெளி. கொஞ்சமும் நம்பமுடியாத வகையில், காலத்தின் எதிர்பாராத சுழல் இவரையும் ஒரு எழுத்தாளராக உருமாற்றம் செய்திருந்தது. 

பாரதிமணி ஒரு வாக்கியத்தைத் துவங்கும்போதும், முடிக்கும் போதும் உண்டாக்கும் யூகிக்க முடியாத சுவாரஸ்யங்கள் போன்றதாகவே இருக்கின்றன அவர் வாழ்க்கை அனுபவங்களும்.    

காலத்தின் புதிர் முடிச்சுக்களையும், அது அரித்துச் செல்லும் காலடி மண்ணைப் பற்றியும் கழுகின் வட்டமாய்ச் சுழலும் சிந்தனைகளோடு இந்த வரியை முடிக்கிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்தப்  புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கட்டுரையையும் ஏதாவது ஒரு காரணத்துக்காகக் குறிப்பிடாமல் விடமுடியாது. ஆனால் எல்லாக் கட்டுரைகளிலும் கண்ணுக்குப் படுகிற ஒற்றுமை இவர் எழுத்தின் இயல்பான செய்நேர்த்தி. முலாம் பூசாத செய்நேர்த்தி.

அவர் சக மனிதர்கள் மேலும், வாழ்க்கையின் மேலும் காட்டும் பாசாங்கில்லாத அன்பும், எளிமையும், பரிவும்தான் அவர் எழுத்துக்கு ஆதாரம் என்று தோன்றுகிறது. அதற்குப் பின்னால்தான் எழுத்தாளர்களும், இசை மேதைகளும், ப்ரபலங்களும் சூழ இருந்த காலங்களின் ஆளுமை இவர் எழுத்தாற்றலுக்குக் காரணியாய் இருக்கிறது.   

“கிருஷ்ணப் பருந்து” வாசித்து விட்டு அதைப் பற்றித் தன்னுடன் விவாதித்ததாய் ஆ.மாதவன் எழுதியிருப்பது தவிர வேறெங்கும் பாரதிமணி, தன்னுடைய வாசிப்பனுபவத்தைப் பற்றி வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவர் -ஒருவேளை தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கம் உடையவராயின்- எழுத்துக்கு இதுதான் மிகப் பெரிய பலம் என நான் நினைக்கிறேன். அதுதான் அவருடைய எழுத்தின் மொழியையும், அதன் மெல்லிய எள்ளல்தொனியையும் தீர்மானிக்கிறது.
   
இவரின் நாடகப் பயிற்சியும், Voice Modulationல் உள்ள ஆர்வமும், சொல்லும் தகவலில் நுணுக்கமான சுட்டுதல்கள் எத்தனை இடங்களில் வெளியாகியிருக்கிறது? 

எண்ணிக்கொள்ளவும்.

பேதி(பேடி அல்ல), கான்(கேன்ஸ் அல்ல), நாதஸ்வரமா இல்லை நாகஸ்வரமா?, சு ப் பு டு ( ‘சு’வும், ‘டு’வும் மிகப் பெரிதாகவும், ‘ப்பு’ மிகச் சிறிதாகவும்), என்.கே.சேஷன் (டி.என்.சேஷன் அல்ல), வங்கபந்து (பொங்கபொந்து), காசினெட்டு (cashewnut), மரவண்டிமத்தளம் (Trivendrum), வந்துட்டு- வந்திற்று, காந்திபாய் தேசாய் (Kanti Bhai Desai), சூட் இல்லை ஸ்வ்யீட், லாலு (லல்லு அல்ல), Dhaka அல்ல Taka, இர்பான் பட்டான் ( பதான் அல்ல).

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜரத்தினம் பிள்ளை அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுப்பது காத்தோட்டமாக ஔட்சைட் (திறந்த வெளிக் கழிப்பறை) சுகத்துக்காகத்தான் எனவும், அவருக்கு சுவர்கள் சூழ்ந்த கழிப்பறை விருப்பமானதல்ல என்றும் காதம்பரி எழுதியிருந்த ”கலை, கலைஞன், காலம்”  புத்தகத்தில் படித்ததாய் ஒரு நினைவு. 

(1947ல் சுதந்திர தினத்தன்று தில்லியில் பிஸ்மில்லா ஃகானுக்கு அடுத்து, பிள்ளை வாசித்த இசையைக் கேட்ட நேரு, “ I am also a piper like you but my pipe will emit only smoke" என்று குறும்புடன் பாராட்டினாராம்.

அதேபோல மகுடி வாசிங்க வாசிங்க என்று அடம்பிடித்த ரசிகர்களிடம், “ மகுடி வாசிக்கிறது திருவெண்காட்டுப் பிடாரன் வேலை.அங்கே போங்க” என்று கடுப்படித்தாராம்.)

சரி. அது போகட்டும்.

இருந்தாலும் அபாயச் சங்கிலியை இழுக்கும் பிள்ளைவாளின் சாகஸ மனசுக்கும், தவில் வித்வான்களிடம் அபராதத் தொகையைக் கொடுத்துவிட்டு இறங்கிச் செல்லும் நேர்மைக்கும், அவரது ஒப்பற்ற தோடிக்கு இணையான ஒரு சபாஷ் போடத்தான் வேண்டும்.    
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தக் கட்டுரைகளில் நான் ரசித்த வரிகளை எல்லாம் இடம்சுட்டி பொருள் விளக்கி இருக்கிறேன். அதுதான் எழுதுபவன் ரொம்பவும் விரும்புகிற உரைகல். 

இவற்றை மட்டும் படித்த ஒரு ரசிகர் வெறிகொண்டு -மதயானையை அடக்க மாட்டார்- இந்தப் புத்தகத்தை வாங்கிவிடுவார் என்று வெற்றிலையில் மை போட்டு என்னால் சொல்லமுடியும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
’அந்த சமயத்திலே அவங்களுக்கு ஒண்ணுக்கு வந்தா என்ன செய்வாங்க?’

‘அது தீர்ந்து புதுப் பென்சில் கேட்டால், பழைய ’எலிப்புழுக்கைப்’ பென்சிலைக் கவனமாகக் கையில் வாங்கி, ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு, ‘இன்னும் ஒரு வாரம் ஓட்டலாம். அடுத்த வாரம் புதுசு தரேன்’ என்று சொல்லுவார்’.

‘நான் வழக்கமாகக் கோவிலுக்குப் போவதில்லை. நானேதான் கடவுள் (அஹம் ப்ரும்மாஸ்மி) என்று அசட்டுத்தனமாக நினைத்துக்கொண்டிருந்த காலம்.

’பத்ம தீர்த்தத்தில் குளிச்சால், ஸ்ரீபத்மநாபன் கடாக்ஷிச்சு வெச்சு எழுதான் மேச வேண்டா’- ( எத்தனை பேர் தனியாகப் பொருள் கேட்டாங்க மணி சார்?) 

’போன் பண்ணிவிட்டு அதற்கான 25 பைசாவைக் கொடுக்கும்போது, மரியாதையுடன் மறுத்துவிட்டு, ‘ உங்களை நேற்று டிவியில் பார்த்தேன்’ என்று கடைக்காரர் சொல்வது எல்லாம் எனக்குப் பெருமையாக இருந்தது.’

‘கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரூ’ என்று பாடவில்லை. காரணம் சேரன் படம் பிறகுதான் வெளியானது!’

‘அன்னா அந்த பிளாஸ்கிலிருந்து வெள்ளி டம்ளர் வளி உள்ளே போகுல்லா, அதுதான் தோடியாட்டும், காம்போதியாட்டும், கல்யாணியாட்டும் வெளீல வருது!’

‘யாராவது அவரிடம் காலில் கான்ஸர் வந்திருக்கிறது என்று சொல்லி வருத்தப்பட்டால், ‘ரெண்டு நாள் ஜாம்பெக் தடவுங்கோ. சரியாப் போயிடும்’ என்று நம்பிக்கையோடு சொல்லுவார்!’

’இரு பெரிய கண்களில் இருந்து குடம் குடமாகக் கொட்டும் ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர்கள்...........உள்ளே போன க்வாட்டருக்கு வஞ்சகமில்லாமல் ‘கல்யாணந்தான் கட்டிக்கிட்டு’ மெட்டுக்கு சிம்பு ஆட்டம் ஆடும் இருபதுக்குக் குறையாத இளைஞர்கள்’ 

’அதற்குப் பின் அவர் யாருக்கும் ஹார்லிக்ஸ் போட்டுக் கொடுத்ததில்லை.’

‘போகும்போது ஒரு சிறிய தொகையை சன்மானமாக ஒரு உறையில் போட்டு அவர்கள் கையில் அசட்டுச் சிரிப்புடன் திணிப்பது’  

‘ஒரு தேதியில் நடக்காத, ஒத்திவைக்கப்பட்ட நாடகத்துக்கு பார்க்க வராமலே, ‘WellDone Vaithi Flops!' என்று தலைப்பிட்டு ஸ்டேட்ஸ்மனில் விமர்சனம் எழுதியிருந்தார்.’

(தலைமையுரையைக் காரிலேயே மறந்து வைத்து விட்டு, கர்நாடக சங்கீதத்துக்கும் கர்நாடகாவிற்கும் வித்யாசம் தெரியாமல் ஒருமணி நேரம் கர்நாடகா குறித்து சுற்றுலாத் தகவல்களை வாரி வழங்கிய மந்திரி ஹெச்.கே.எல்.பகத் குறித்த தகவல் ஜோர்.)  

’சுப்புடு உட்டியானா, நௌலி செய்தாரென்றால் அவரது வயிறு முதுகெலும்பைத் தொடும்’

‘தண்டி பின்னண்டை இருக்கணம்’

‘நாறோலுக்குத்தானே போறாய்? வறோது ஒரு கொலை மட்டிப்பழம் வாங்கிண்டு வா. உங்க ஊர் மட்டிப்பழம் சாப்ட்டு நாளாச்சு’

‘ஏ கோபாலகிஷாங், மட்டிப்பழம் எடுத்துக்கோ. நன்னா வெளிக்குப் போகும்’

‘ஏய்ய்ய்! வேண்டாம்...அப்பறம்...பீச்சும்’

(மேலேயுள்ள நாலு வசனங்களில் செம்பையை உயிரோடு நிறுத்திவிட்டார் செம்பைக்கே உரித்தான பட்டவர்த்தனத்துடன்)

’சந்தானத்துக்கு ‘நான்தான் Boss' என்பதைத் தூங்கும்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும்’. 

’தலைக்குத் தேய்த்த கடலை மாவு வாயில் வழிந்தால் என்ன ருசியோ, அதே ருசிதான் மதராஸ் ஹோட்டல் சட்னி.’ 

'You drink your Pissky; Let me drink my Whisky!'

‘உடம்பில் பொட்டுத் துணியில்லாமல், போனால் போகிறதென்று காலுக்குச் செருப்பு மட்டும் அணிந்து கொண்டு, நடனமாடும் பெண்களை ஓரிரு தடவைக்கு மேல் பார்க்க முடியாது.’

‘பெரிசுகள் உரக்க சிலோன்லருந்து திருவந்தரம் போறான் என்று தெரிந்தது போல் சொல்வார்கள்’

‘இங்கு நான் திரையுலகில் எதிர்கொள்ளும் ஒரு டார்ச்சரைப் பற்றியும் சொல்லவேண்டும்...........திரையுலகில் தப்புத் தப்பாக ஆங்கிலம் பேசுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்கமுடியாது.’

'அவன் தந்தை சங்கோஜப்படாமல் சாப்பிடு என்பதை இப்படிச் சொன்னார்: ‘Beta, This is your house. Eat Shamelessly'

'தேவையே இல்லாமல், ‘Note down my Residence number' என்று படுத்துவார்கள்’

’இன்றைய இந்தியன் ரயில்வேயைக் குறை கூறுபவர்கள் சிவன் கோவிலில் விளக்கணைத்த பாவத்துக்கு ஆளாவார்கள்.’

‘வெயில் காலத்தில் மூன்று பகல் இரு இரவு நேரங்கள் தூங்காமல் உட்கார்ந்து கொண்டே வருவது பிரயாணமல்ல, நாம் வளர்ந்த கிராமத்தை விட்டு தில்லிக்கு ஓடிவந்ததால் கடவுள் நமக்கு அளித்த தண்டனை.’

‘ஐம்பதுகளில் நான் மட்டுமே தில்லியிலிருந்து பார்வதிபுரம் வரை போகத் தரை மார்க்கத்தில் உபயோகமாகும் எல்லாவித வாகனங்களையும் பயன்படுத்தியவனாக இருந்திருப்பேன்.’

‘சென்ட்ரலில் இறங்கியபின், அப்பிய கரிப்பொடியே , தசாவதாரம் பூவராகன் போலிருக்கும் பயணிகளையும், அழைத்துப் போக வந்தவர்களையும் வித்தியாசம் காட்டிவிடும்.’

‘நாங்கள் ஆபீசுக்கு லேட்டாகப் போனால், ஆபீஸ் எங்களை விட்டுவிட்டு ஓடிவிடும்.’

‘E.P.D.P.யா? - (இலை போட்டு தண்ட புண்டமா)? இல்லை T.P.D.P.யா? - (தட்டு போட்டு தண்ட புண்டமா)?’      

‘மூன்று இரவு- இரு பகல் பிரயாணத்துக்குப் பிறகும் எப்போது சென்னை வந்து சேரும் என்பது அப்போதைய ரயில்வே மந்திரி ஜக்ஜீவன் ராமுக்கே தெரியாது.’

’கரண்டியா அது? பாதாளக் கரண்டி. எங்கிருந்துதான் கெடச்சிதோ? ஒழக்குப் பொடி கொள்ளும் நம்பாத்துப் படி. எறங்கறோதே அவ இதை மறந்துருவா. எனக்குத்தான் ஓர்மையிருக்கும்’

‘இது ஸ்டேன்ஸ் காப்பி. அவ அய்யனார் காப்பியைத் தருவா. இதையெல்லாம் கேக்கப்படாதுரா, பக்கத்தாத்துல இருக்கா...........பாவம்.............இல்லாமைதானே காரணம்’

’ஐயா, நீங்க இந்த ஊருக்கு வரும்போது உங்களுக்கு என்ன வயசு?.................இந்த வயசு வித்தியாசம் அவங்களுக்கும் உண்டுமில்லியா?’

’இன்னும் கொஞ்சம் நின்றால் என் காலில் வேர் பிடித்துவிடும் என்று சொன்னது அவனுக்குப் பிடித்திருந்தது.’

‘பாபாவில் ரஜினி ஒரு முத்திரை காண்பிப்பாரே - ஆள் காட்டி விரலையும் சுண்டு விரலையும் நீட்டி மற்ற விரல்களை மடித்து- அந்த முத்திரையைக் குறுக்கே வைத்தால் உள்ள அளவுதான் பாட்டியாலா பெக்.’

‘போய்விட்டு வந்து ஆறுமாதத்துக்குப் பிறகும், நேரில் பார்ப்பவர்களிடம், தன் சிலோன் விஜயத்தைப் பற்றி அரைமணி நேரம் அறுக்காமல் விடமாட்டார். யாரும் அவர் எதிரே மாட்ட பயப்படுவார்கள்’

‘உலகத்தில் உள்ள அனைவருமே தூக்கத்தை மறந்து என் நாடகத்தைக் கேட்க ரேடியோ பெட்டிகள் முன் உட்கார்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்வேன்.’

‘ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்துக்குப் போகும்போது, குனியாமல் பேசிக்கொண்டே மைக்கில் பேப்பர் சலசலப்பு சத்தமில்லாமல் கீழே நழுவ விடுவது ஒரு கலை.’

‘இந்த ரூ.20க்கான Government of India காசோலைக்கு ராஷ்டிரபதி பவனில் அதிகாலையில் தூங்கிக்கொண்டிருக்கும் குடியரசுத் தலைவரைத் துணைக்குக் கூப்பிட்டு For and on behalf of President of India சார்பில் Accounts Officer கையெழுத்து போட்டிருப்பார்.’
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இத்தனை வசனங்களுக்கும் மசியாத கல்லுளி மங்கர்களுக்காகவும், மங்கிகளுக்காகவும் இன்னும் சில புரட்டாசி ஆஃபர்கள்.

1. தில்லியில் குப்பை கொட்டக் கீழ்க்கண்ட ஏழு திறமைகள். (நூறு ரூபாய் செலவு செய்து புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்க.)

2. சுஜாதா லோலோவென்று இல்லாத மெக்ஸிகன் சலவைக்காரி ஜோக்குக்கு அலைய விட்டது போல் இல்லாமல், மேலே உள்ள பத்தியைப் படித்து நூறு ரூபாய் நிஜமாகவே செலவு செய்தவர்களுக்கு 109ம் பக்கத்தில் அசலாகவே ஒரு சமஸ்க்ருத சம்போக ஜோக் இலவசம்.

3. விமானத்தில் எகானமி வகுப்பில் போகாமல் ஃபர்ஸ்ட் க்ளாஸில் போவதற்கான வினோத் சொல்லும் வினோத காரணம் 110ம் பக்கத்தில்.

4. அவரது லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் DLO 7727ல் பின்னால் உட்கார்ந்து பயணிக்கும் அதிர்ஷ்டம் வாய்த்த 16க்கும் மேற்பட்ட பிரபலங்கள் யார் யார்?

5. கணக்குப் பாடம் வேப்பங்காயாகக் கசந்த அனுபவத்தை அவசியம் கேளுங்கள். இல்லாவிட்டால்  யம லோகத்தில் அவரை எண்ணெய்க் கொப்பரையில் தள்ளிவிடும் அபாயம் உண்டு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அண்ணாவுடன் பார்த்த சினிமாக்கள், பொங்ளாதேஷில் இவருக்கு சின்னவீடு இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம், இவருக்கும் முஜீபுர் ரெஹ்மானுக்குமான உருவ ஒற்றுமை, வடசேரி குண்டுப்போற்றி ஹோட்டல் ரசவடை -இவையெல்லாம் மட்டும் இருவேறு இடங்களில் சொல்லப்பட்டிருப்பவை. க.நா.சு. சாப்பிடும் டபுள் ஸ்வீட் போல தித்திப்பாகவே இருந்தாலும், அடுத்த பதிப்பில் சரிசெய்து விடலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட வெவ்வேறு ப்ரபலங்களோடு பழகியிருந்தாலும் அவர்களின் பதவியையோ, நட்பையோ உபயோகப்படுத்திக்கொள்ளாத கண்ணியம். 

அன்றைக்கு இவரோடு அலுமினியத் தட்டில் கையேந்தி பவனில் தோசை சாப்பிட்டு, இன்றைக்கு ரிலையன்ஸ் சேர்மனாகவும், முகேஷ் அம்பானியின் வலது கையாகவும் உள்ள ரிலையன்ஸ் பாலுவுடன் இன்றும் தொடரும் நட்பு.

ஷேக் ஹஸீனாவுடன் அவரென்று தெரியாமலே அவர் பதவிக்கு வரும் முன் தொடர்ந்த நான்காண்டு கால நட்பு.

தொழில் நிமித்தமாக லண்டனில் இவர் தங்கியிருந்த டார்ச்செஸ்டர் ஹோட்டலில் மொரார்ஜி தேசாயும் தங்கியிருந்த அனுபவம்.

அன்னை தெரசா, ராஜீவ் காந்தியுடன் இவர்களுடனான இரு தனித்தனி விமானப் பயண அனுபவங்கள்.

ஆங் சான் சூ கி தில்லியில் தங்கிப் படிக்கும்போதே அவருடன் உண்டான நட்பு.

நான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம், நிகம்போத்காட் மற்றும் சிங் இஸ் கிங் கட்டுரைகளில் தொனிக்கும் ஆழமான பார்வை. அந்தக் கட்டுரைகளிலும் தொனிக்கும் எள்ளல் ரசம்.

இவரின் காலத்தை வரலாறாகப் பதிவு செய்த சாதனை ( இன்றைக்கு இதன் அருமை தெரியாது. ஆனந்த ரங்கப்பிள்ளையின் சொஸ்த லிகிதக் குறிப்புகளைப் போல )

சிகரமாக, 27 நண்பர்களின் ஆத்மார்த்தமான பகிர்வுகளோடு வெளியிடப்பட்டிருக்கும் இவர் நட்பின் ஆழம்.

’பாரதிக்குப் பின் பதினான்கு பேர்தான் வந்திருந்தார்களாம்.நான் தில்லியில் இறந்தால் ஆயிரம் பேராவது வருவார்கள். ஐம்பது வருடங்களில் நல்ல நண்பர்கள்தான் என் சேமிப்பு. இப்போது சென்னையிலும் சேகரித்து வருகிறேன்’  என்று சொல்லும் இவரின் எழுத்துக்கள் இந்த நூற்றாண்டில் எழுதப் பட இருக்கும் பல எழுத்துக்களுக்கும் சவாலாக இருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவர் இப்போதைக்குச் சொன்னபடி எழுத வேண்டியவை:

1. ஹெச்.கே.எல்.பகத்தின் தில்லி அட்டூழியங்கள்.   
2. ஸ்கூட்டரின் சுயசரிதை (நாஞ்சில் நாடனுடன் எனது விருப்பமும் )
3. உலகப் புகழ் பெற்ற சுந்தரவனக் காடுகள்.
4. இசை குறித்து இன்னும் சில கட்டுரைகள்.

இதை உடனே எழுதி முடித்தால், வெள்ளை யானையைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டியது என் பொறுப்பு. நீங்கள் ஆசைப்படும் உங்கள் நண்பர் குல்னா நியூஸ்பிரிண்ட் ஷாஜஹானுடன் பேச நான் ஏற்பாடு செய்வேன். டீல் ஓக்கேதானா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பிழிந்து கொடுத்த தோடி ராகச் சாறை ஆயிரம் தடவைக்கு மேலாகக் குடித்திருக்கும் பாரதிமணிக்குத், தான் முறையாகக் கர்நாடக இசை கற்றுக்கொள்ளவில்லையே என்ற குறை  இருக்கிறது.

ஆனால் அவர் கற்றுக்கொண்டிருந்தால், ஒருவேளை தில்லி போகாதிருந்திருக்கவும், ஒருவேளை க.நா.சு.வின் மாப்பிள்ளையாய் இல்லாதிருந்திருக்கவும், ஒருவேளை இத்தனை ப்ராபல்யங்களோடு பழகாதிருந்திருக்கவும், ஒருவேளை நாமெல்லாம் இப்படி ஒரு அற்புதமான வாசிக்கும் அனுபவத்தை இழந்திருக்கவும் கூடும்.

( பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதிமணி - கட்டுரைகள் - உயிர்மை வெளியீடு - ரூ.110/ - 192 பக்கங்கள் )

19.9.12

இமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம்- III - இசைக்கவி ரமணன்


முந்தைய இரு அத்யாயங்களின் இணைப்பு கீழே:

http://sundargprakash.blogspot.in/2012/09/blog-post_4.html

http://sundargprakash.blogspot.in/2012/09/ii.html

3.

கங்கைக் கரையில் நிற்கிறேன்.
தவத்தில் எழுந்த நெருப்பில் பிறந்த செந்தமிழ்க் கவிதை போலே,
கட்டறுந்து விரைகிறாள் கங்கை!
காணக்காண, உள்ளச் சிமிழ் உடைந்து
வெள்ளமென எண்ணங்கள் விம்மி வருகின்றன.

நதி, பெண்தான், ஐயமே இல்லை.
இந்த நளினமும்,
ஓயாமல் கறையைக் கழுவி,
ஒருவரின் நன்றிக்கும் காத்திராமல் விரையும் கருணையும்,
சுமையைச் சுவையாய்க் கருதும் தயையும்,
மாறிமாறித் தோற்றமளித்தும் மாறாத பேரழகும்,
இந்தப் பிரபஞ்சத்தில் பெண்ணைத் தவிர யாருக்குண்டு?

கங்கை என் தாய், என்னைக் கழுவும் போது.
என் தோழி, என் கால்களைக் கிசுகிசுத்தபடிப் பலப்பல வண்ணக் கதைகள் சொல்லும்போது.

குளியல் வேறு; முழுக்குப் போடுவது வேறு.
குளித்துவிட்டுத்தான் புனித நதிகளில் இறங்க வேண்டும்.
இறங்கி, பாவங்களுக்கு முழுக்குப் போடவேண்டும்.
கங்கை முக்திக்கு, வினை இடையூறாக வராமல் பார்த்துக்கொள்வாள். ‘கங்கையில் எத்தனை மீன்கள்! அவையும் முக்தி பெறுமோ?’ என்று வினவுகிறார் கபீர்தாஸ்.
பெறாதுதான்! முழுக்குப் போட்டால்தான் முக்தி!
“இனி, அறத்திலிருந்து சற்றும் பிறழேன். இந்த முடிவு இனிதே நிறைவேறத் துணைபுரிவாயாக” என்று முழுக்குப் போடவேண்டும்.
அப்போது, போனவினை போனவினையாய்ப் போகும்.

சரி, பாவம் எது?
ஊட்டிய கரத்தைக் கடிப்பது,
நாட்டை, தாய்மொழியை, அன்பு மனைவியை, அருமைக் குழந்தைகளைப் பழிப்பது,
கையில் பொருளிருக்கக் கைநீட்டிய ஏழைக்குக் கஞ்சி கூட வார்க்காமல் விரட்டுவது,
பொய்மை, திருட்டு, பொறாமை இவை போன்றவையே!
இவற்றுக்கு முழுக்குப் போட்டு, முழு மனிதனாய் எழுந்து
கரைக்கு வரக் கங்கை அற்புதமான வாய்ப்பு!

ஆ! கங்கை!

காலைக் கதிரொளியில் தங்கச் சரிகை விரிக்கிறாள்.
கரையருகே கைவீசுகிறாள்.
நடுவே, சிறகு முளைத்துப் பறக்கிறாள்.
பலப்பல மகத்தான நாகரிகங்களின் மலர்ச்சிக்குத் தோதாயிருந்தவள். மாமுனிவோர் தவம் சத்திய தரிசனங்களில் முடிந்து அற்புதக் கவிதைகளாக வெளிப்பட்ட போது காது குளிரக் கேட்டவள்.
சாம்ராஜ்யங்களின் சரிவுகளுக்குச் சாட்சியாய் இருந்தவள்.
சீதையின் பாதம் பட்டுச் சிலிர்த்தவள்.
இன்றும் நாட்டின் விளக்கைக் காத்துவரும் ஏழைகளின் பாதங்களைத் தொட்டுத் தொட்டு வணங்குகிறவள்.
மட மனிதர்களால் மாசுபடுத்தப்பட்டும் புனிதம் மாறாதவள்.

வானில் மந்தாகினியாய், வழியே ஜான்வியாய்,
பகீரதன் தவம் பலித்தபோது பாகீரதியாய்,
இதோ மலையை விட்டுச் சமவெளியில் புகும்போது
கங்கையாய்ப் பொங்கி வருகிறாள்.
நாம் காணும் நீருக்குக் கங்கையே மூலம்.

கரையோரம் கூடச் சங்கிலியைப் பிடித்துக் கொண்டுதான் குளிக்க வெண்டியுள்ளது.
அப்போதும் பறப்பது போல் உடலை விசைக்கிறது அவள் வேகம்.
என்னென்ன நம்பிக்கைகளுடன், எங்கெங்கிருந்து, எத்தனை எத்தனை மனிதர்கள்!
கங்கை, காதல் போல், காந்தம்.
அழகுக்கும் ஈர்ப்புக்கும் காரணமுண்டோ?
விளக்கத்தான் முடியுமோ? விலகத்தான் ஒண்ணுமோ?!

சின்னஞ்சிறிய சிறுமி, கையில் சிறு தட்டுடன் எதிரே நிற்கிறாள்.
என்னைச் சாய்வாகப் பார்த்து, ‘ திலகமிடவா?’ என்று இனிமையாகக் கேட்கிறாள்.
பதிலுக்குக் காத்திராமல் பிஞ்சு விரலால் சிந்தூரம் குழைத்து பற்றிய நெற்றி குளிரக் குளிர இடுகிறாள்.
லஹரியில், அவளது பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்.
அசையாமல் ஏற்கிறாள். நெகிழ்ந்து கிடந்தவனின் மீது ஒளிப்பார்வை வீசிவிட்டுக் கூட்டத்தில் மறைகிறாள்.

(தொடரும்)

18.9.12

வேண்டாம் 71 (அல்லது ) உலக நீதி - III


உலகநீதியின் இறுதிப் பகுதி இது. 51ல் இருந்து 71 வரை செல்கிறது.

இதற்கு முந்தைய இரு பதிவுகளையும் கீழேயுள்ள இணைப்பில் வாசிக்கலாம்.

http://sundargprakash.blogspot.com/2012/09/71.html
http://sundargprakash.blogspot.com/2012/09/71-ii.html

51. தயவு தாட்சண்யமில்லாமல் பிறருக்குத் துன்பம் உண்டாக்க வேண்டாம்.

52. கண்ணால் பார்க்காத ஒன்றைப் பார்த்ததாகப் பொய் சொல்ல வேண்டாம்.

53. பிறர் மனம் புண்ணாகும்படியான வார்த்தைகளைப் பேசவேண்டாம்.

54. முதுகுக்குப் பின்னே குறைகூறும் அற்பர்களோடு சேர வேண்டாம்.

55. தன் வீரத்தைத் தானே மெச்சிக்கொள்பவர்களோடு சேர வேண்டாம்.

56. வீண் வழக்கு வாதங்களில் நேரத்தைச் செலவழித்து அழிய வேண்டாம்.

57. பேச்சுசாமர்த்தியத்தைக் காட்டி கலகம் செய்து திரிவது வேண்டாம்.

58.  கடவுளையும், கடவுள்த்தன்மையையும் ஒருபோதும் மறக்கவேண்டாம்.

59. உயிரே போகும் என்றாலும் பொய் சொல்ல வேண்டாம்.

60. வீண்பழி சுமத்தி அவமதித்த உறவினர்களுடன் உறவு கொள்ளவேண்டாம்.

61-65. சலவை செய்பவர், சிகைதிருத்துபவர், சகல கலைகளையும் கற்றுத் தந்த ஆசிரியர், தொப்புள் கொடியை அறுத்த மருத்துவர், பெரும் நோயைத் தீர்த்த மருத்துவர்- இவர்களின் கூலி அல்லது சம்பளத்தை இனிய வார்த்தைகளுடன், நன்றியறிதலுடன் கொடுக்க வேண்டும். கொடுக்காதவர்களுக்கு யமதர்மனின் தண்டனை நிச்சயம் என்பதால் அவற்றை நிறுத்தி வைக்க வேண்டாம்.

[மிகுந்த சுவாரஸ்யமான இந்த 11 ஆவது பாட்டை மட்டும் எழுதாது விட முடியவில்லை.

முதல் இடுகையில் எழுத விடுபட்ட மற்றொரு யூகம். ஒவ்வொரு விருத்தத்திலும் வள்ளியின் மணவாளனை வணங்கும் உலகநாதர், நிச்சயமாக திருச்செந்தூருக்கு அண்மையில் வசித்தவராகவே இருப்பார் என்பது அது.

இந்தப் பாடலில் உபயோகித்துள்ள ‘அஞ்சு பேர்’ எனும் உபயோகம் அவர் மிக நெருக்கமான 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருப்பாரோ என்ற விதையையும் தூவுகிறது.

அஞ்சுபேர் கூலியைக்கைக் கொள்ள வேண்டா
அதுஏதுஇங் கென்னின்நீ சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்றன் கூலி
சகலகலை யோதுவித்த உவாத்தி கூலி
வஞ்சற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மாநோவுதனைத் தீர்த்த மருத்தன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ? ஏமன் தானே.]

66. ஒற்றுமையான குடும்பத்தை சிறிய தவறுகளைப் பெரிதாக்கி, வஞ்சனை செய்து பிளக்க வேண்டாம்.

67. தன் கொண்டைக்குப் பூ வைத்துக்கொள்வதற்குத் தேடி அலைய வேண்டாம்.

68. பிறருக்குப் பழியுண்டாகும் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

69. இழிவான காரியங்களைச் செய்யும் துர்க்குணம் படைத்தவர்ளுடன் சேர வேண்டாம்.

70. சகல வல்லமையும் கொண்ட தெய்வத்தை இகழ வேண்டாம்.

71. வாழ்வில் அனுபவமும், மதிப்பும் மிக்க பெரியவர்களை வெறுக்கவேண்டாம்.

இந்த எழுபத்தியொரு அறிவுரைகளைத் தன் வாழ்வில் படித்த, பட்ட, பார்த்த அனுபவங்களின் சாரமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. சக மனிதர்களுக்கு முன்னால் போகும் சாலை நேரானதல்ல. அவற்றில் எங்கெங்கு மேடு பள்ளம், நெளிவு சுளிவு இருக்கிறது என்பதை முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கும் மேன்மை தெளிவாய் விரிகிறது.

பனிரெண்டு எண்சீர் விருத்தத்தின் ஒவ்வொரு இறுதி அடியிலும் முருகப்பெருமானை வாழ்த்திய பின்பே அடுத்த பாட்டிற்குச் செல்கிறார். கடவுள் நம்பிக்கையைத் தாண்டி நமது நாட்டுக்கு மட்டுமே உரித்தான உடலின் அநித்யத்தைத் தன் நாளின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்தும் தத்துவச் செழுமை அபாரமானது.

பதிமூன்றாம் பாடல் தன்னைப் பற்றிய குறிப்போடும், இந்த உலகநீதியை வாசிப்பதாலும், பின்பற்றுவதாலும் உண்டாகும் நூற்சிறப்போடும் முடிகிறது.

(பாடுப்பட்டுப் பலவகைச் செல்வம் தேடி வாழ்ந்த புலவனாகிய உலகநாதன் எனும் நான், அறுமுகனைப் பாடுவதற்காகக் கற்ற தமிழால், அவனின் திருவருளால் இந்த உலகநீதியைப் பாடினேன்.

இதை நேசித்துக் கற்பவர்களும், கருத்தறிந்து கேட்டவர்களும், எப்போதும் ஞானத்தால் உண்டாகும் இன்பத்தை அடைந்து புகழோடு உலகம் உள்ள வரை வாழ்வார்கள்.)

இந்த விழுதின் வேரான உகலநீதி தந்த நம் முப்பாட்டன் உலகநாதனை வாழ்த்துவோம்.

சிறு வயதில் வாசித்த "ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்" இங்கே வாசிக்கத் தோதாய்.

 http://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF

14.9.12

ஹே! ஏழு மட்டும்!

நவீனம், நவீனம் என்று வடமேற்குப் பக்கமாக தலையைத் திருப்பிக்கொண்டு அநியாயத்துக்கு அழிச்சாட்டியம் பண்ணும் பேர்வழிகளுக்கான தமிழின் நயமான மருந்து இது. 

நவீனம் என்பது காலம் சம்பந்தப்பட்டதல்ல. அது சிந்தனை அல்லது கற்பனையின் புதுமை. மேன்மை.

இதைப் புரிய வைக்க எனக்குப் பிடித்த ஏழு பாட்டுக்கள் இன்றைக்கு.

முதல் ஐந்தும் ஔவைக் கிழவி எழுதியது.

பாட்டு- 1:

நண்டு சிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்ட கருவழிக்கும் கொள்கைபோல்- ஒண்தொடீ இ
போதம் தனம் கல்வி பொன்றவரும் காலம்அயல்
மாதர் மேல் வைப்பார் மனம்.                                                           (நல்வழி-36)

பொருள்: 

குஞ்சு பிறந்தால் அம்மா நண்டு இறந்துவிடும். முத்து முத்திவிட்டால் சிப்பியின் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும். அரிசி பூத்து விட்டால் மூங்கில் அழிந்துவிடும். தார் போட்டுவிட்டால் வாழையின் வாழ்க்கை அவ்வளவுதான். வேறுவார்த்தைகளில் சொன்னால் அழிவு காலம் நெருங்கினால் அவை கொண்ட சூலாலேயே அது நேரும்.

அதுபோல பிற பெண்களுக்குப் பின்னால் பித்துப்பிடித்து அவன் மனம் செல்லத் தொடங்கிவிடும் காலத்தில், அவனுடைய ஞானம், செல்வம், கல்வி முதலியன அழியத் தொடங்கிவிடும்.

பாட்டு- 2:

பூவாதே காய்க்கும் மரமும்உள; மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே; - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு.                                            (நல்வழி-35)

பொருள்:

பூக்காமலேயே காய்க்கும் மரங்கள் உள்ளதைப் போல சொல்லாமலே உணரும் அறிவாளிகள் இருக்கிறார்கள்.

என்னதான் கிரமப்படி நன்கு உழுது தூவி விதைத்தாலும் முளைக்காத விதைகள் போல, எத்தனை சொல்லிக் கொடுத்தாலும், மூடனால் அதை உணர முடியாது.

பாட்டு- 3:

வேதாளம் சேருமே; வெள்ளெருக்குப் பூக்குமே;
பாதாள மூலி படருமே; - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே;
மன்றோரம் சொன்னார் மனை.                                                      (நல்வழி-23)

பொருள்:

நடுநிலைமை தவறுபவன் அல்லது தவறான சாட்சி சொல்லுபவன் வீட்டில் வேதாளம் குடியேறும். வெள்ளை எருக்கு தழைத்துப் பூக்கும். பாழ் மனைகளில் மட்டுமே தழைத்து வளரும் பாதாள மூலி எனும் செடி படரும். மூதேவி குடிபுகுந்து ஆட்சி செய்வாள். விஷப் பாம்புகள் நிரந்தரமாக வசிக்கும்.

பாட்டு- 4: 

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடுஞ்சினத்துப்
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே; - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.                                                          (மூதுரை-23)

பொருள்:

பிளக்கப்பட்ட கற்பாறை மீண்டும் சேராது. அதுபோல மூர்க்கர்களின் கோபம் என்றும் நன்மை தராது.

பொன்னாலான கட்டி ஒன்று பிளந்தால் பொடியுடன் பற்ற வைத்தால் மீண்டும் இணைந்துவிடும். சிலரின் கோபம், நியாயம் தவறாத பெரியவர்களின் அறிவுரையால் சரியாகி விடும்.

ஆனால் சான்றோர்களின் சினமோ,  நீர்ப்பரப்பின் மீது எய்யப்பட்ட அம்பால் உண்டாகும் காயம் போல அடுத்த நொடியே மறைந்துவிடும்.

பாட்டு- 5:

மடல்பெரிது தாழை; மகிழினிது கந்தம்;
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா; - கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகிவிடும்.                                                                 (மூதுரை-12)

பொருள்:

தாழம்பூவின் மடல் பெரியது. ஆனால் நறுமணம் குறைவானதுதான். மகிழம்பூவோ சிறிதானாலும் ஊரையே மயக்கும் நறுமணம்.

அளவிட முடியாது பரந்து விரிந்த கடலின் நீர் எந்த உபயோகத்துக்கும் உதவாது. ஆனால் அதன் பக்கத்திலேயே தோண்டப்பட்ட அளவில் சிறியதான ஊற்று நீர் தாகம் தணிக்கும்.

ஆகவே ஒருவர் அறிவின் ஆழம் தெரியாமல் புறத் தோற்றத்தைக் கண்டு இகழக்கூடாது.  

அடுத்த இரண்டு பாடல்களும் எழுதியவர் யாரென்று தெரியாது போனாலும் எழுதியவரின் கருத்தால் காலங்களைக் கடந்து நிற்கிறது.

இவை நீதி வெண்பா எனப் பெயர் இடப்பட்டு அழைக்கப்படுகிறது. மொத்தம் 100 பாடல்கள். கிட்டத்தட்ட சமஸ்க்ருதத்தில் வெளியான நீதி சாஸ்த்ரத்தின் கருத்துக்களை ஒத்து இருக்கிறது.

பாட்டு- 6:

ஆயுமலர்த் தேன்வண்டு அருந்துவது போல்இரப்போர்
ஈயுமவர் வருந்தாது ஏற்றம் அறல் - தூயஇளம்
பச்சிலையைக் கீடம்அறப் பற்றி அரிப்பதுபோல்
அச்சமுற வாங்கல் அகம்.                                                               (நீதிவெண்பா-60)

பொருள்:

வண்டு பூக்களில் தேன் பருகும் நாசூக்குடன் யாசிப்பவர்கள் தானம் தருபவர்களின் மனம் கோணாமல் யாசிக்க வேண்டும்.

இளம் பச்சிலையை விடாமல் பற்றி ஒரு புழு அரித்துத் தின்பது போல பயத்தை உண்டாக்கி யாசிப்பது அகம்பாவம்.

கிட்டத்தட்ட இதையே ஒரு அரசின் வரிவிதிப்புக்கும் பொருத்தமாக இதைக் கொள்ளலாம்.

இன்றைக்கு அசராமல் டீசல் லிட்டருக்கு ரூ 5/- உயர்த்தியிருக்கும் இந்திய அரசுக்கு இந்தப் பாடல் அர்ப்பணம்.

பாட்டு- 7:

வேசியரும் நாயும் விதிநூல் வயித்தியரும்
பூசுரரும் கோழிகளும் பொன்னனையாய்! - பேசில் ஒரு
காரணந்தான் இன்றியே கண்டவுடனே பகையாம்;
காரணந்தான் அப்பிறப்பே காண்.                                                       (நீதிவெண்பா-65)

பொருள்:

இரு வேசிகள் சந்திக்க நேர்ந்தால் காரணமின்றிப் பொறாமை பிடித்துப் பகைத்துக் கொள்வார்கள்.

இரு நாய்கள் சந்தித்தால், ஒன்றை ஒன்று முறைப்பதும் குரைப்பதும் சகஜம்.

இரண்டு வைத்தியர்கள் சந்தித்தால் ஒத்துப்போக மாட்டார்கள்.

இரண்டு அந்தணர்கள் சந்தித்தால் சாஸ்திரங்களிலும், வியாக்யானங்களிலும் ஒன்றாமல் வேறுபடுவார்கள்.

இரண்டு சேவல்கள் சந்திக்க ஒன்றை ஒன்று கொத்திக் காயப்படுத்திக் கொள்ளும்.

இதற்குக் காரணம் பிறவிக்குணமே அன்றி வேறு காரணம் இல்லை. நாய்வாலை நிமிர்த்தமுடியாது.

தேடிக்கொண்டே இருந்தால் என்றோ தொலைத்த நம் தலைமுறைகளின் வேர் கால்களில் தட்டுப்படும்.

12.9.12

வேண்டாம் 71 - (அல்லது ) உலக நீதி - ( II )


இந்த இடுகையின் முதல் பகுதியை வாசிக்க இந்த இணைப்பைச் சுட்டவும்.

http://sundargprakash.blogspot.in/2012/09/71.html

வேண்டாம் - 71ல்  இருபது பார்த்தாச்சு.

இப்ப 21ல் இருந்து ஒரு 50 வரைக்கும் பார்க்கலாமே!

21. கற்றவர்களை, ஒருநாளும் தராதரமின்றிப் பழிக்க வேண்டாம்.

22. நெறிதவறாப் பெண்களை தவறான எண்ணத்தோடு அணுக வேண்டாம்.

23. ஆள்பவனைத் தாறுமாறாய் விமர்சிக்க வேண்டாம்.

24. கோயில் இல்லாத ஊரில் வாழவேண்டாம்.

25. மனைவியை விட்டுப் பிற பெண்களைத் தேடி அலைய வேண்டாம்.

26. மணந்த பெண்ணின் குறைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம்.

27. மீண்டு வரமுடியாத இழிவான செயல்களில் வீழ வேண்டாம்.

28. கடும்போரில் இறங்கியபின், புறமுதுகு காட்டிப் பின்வாங்க வேண்டாம்.

29. குணத்தால் இழிந்த மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம்.

30. சூழ்நிலையால் தாழ்ந்தோர் மனம் வருத்தும்படி குறை காண வேண்டாம்.

31. வாய்ச்சவடால் பேர்வழிகளின் வார்த்தைகளுக்குப் பின்னால் போக வேண்டாம்.

32. நம்மை மதிக்காதவர்களின் வீட்டுப்படியைக் கூட மிதிக்க வேண்டாம்.

33. அனுபவத்தால் மூத்தவர்களின் அறிவுரைகளை ஒதுக்கி, மறக்க வேண்டாம்.

34. சகிப்புத்தன்மையற்ற, முன்கோபக்காரர்களுடன் தொடர்பு வேண்டாம்.

35. வித்தை கற்பித்த குருவுக்கு, தக்ஷிணை தராமல் இருக்கவேண்டாம்.

36. வழிப்பறிக் கொள்ளைக்காரர்களோடு நட்புக் கொள்ள வேண்டாம்.

37. நன்மை, தீமைகளை ஆராயாமல் எந்த ஒரு செயலிலும் இறங்கவேண்டாம்.

38. பொய்க்கணக்கு எழுதி ஏமாற்றி வஞ்சகம் செய்ய வேண்டாம்.

39. பகைவர்களுக்கு இடையிலான போர்க்களத்தில் நுழைய வேண்டாம்.

40. பொது நிலத்தில் சட்டவிரோதமாக ஒருநாள் கூட இருக்க வேண்டாம்.

41. ஒரே நேரத்தில் இருதார வாழ்க்கை தேடவேண்டாம்.

42. பலமற்ற எளியவர்களோடு பகை கொள்ள வேண்டாம்.

43. சேரத் தகாத மனிதர்களோடும், இடங்களிலும் சேர வேண்டாம்.

44. பிறர்செய்த உபகாரத்தை ஒரு நாளும் மறக்கவேண்டாம்.

45. ஊருக்குள் கலகம், புரளி போன்றவைகளை உண்டுபண்ண வேண்டாம்.

46. உற்றவர்களை எந்தக் காரணத்திற்கும் அலட்சியப் படுத்தவேண்டாம்.

47. பெறுவதற்கரிய புகழ் உண்டாக்கும் செயல்களுக்கான வாய்ப்புக்களை நழுவவிட வேண்டாம்.

48. யாரோ ஒருவருக்குப் பிணையாகி, அவரால் விடுபட முடியாமல் திரிய வேண்டாம்.

49. எந்த மண்ணில் வாழ்கிறோமோ, அந்த மண்ணையே குறை சொல்லவேண்டாம்.  

50. யார் மீதோ உள்ள வெறுப்பில், வீணாக சண்டையிட்டுத் திரிய வேண்டாம்.

( தொடரும் ) 

11.9.12

இமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம் - II - இசைக்கவி ரமணன்.


இத்தொடரின் முதல் பகுதியை வாசிக்க:


”இமயச் சிகரங்கள் தேவர்களின் ஆன்மாக்கள்” என்கிறான் காளிதாசன். மேலிருந்து பார்த்தால், ரதத்தின் பிரும்மாண்டமான அற வில்லாகப் படுத்திருக்கிறது இமயம். பூமித் தாய் களைப்பு மேலிட்டு உடம்பை முறுக்கிச் சொடக்குவிடப் புடைத்தனவே மலைத்தொடர்கள். இமயமும் அப்படித்தான்.

இமயம் இளைய மலைதான், திருவண்ணாமலையைக் காட்டிலும் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம்; ஒரு காலத்தில் கடலாயிருந்த பகுதிதான் தற்போது இமயமாய் நெடிதுயர்ந்து நிற்கிறது. மிக உயரமான பகுதிகளில், கடல்வாழ் பிராணிகளின் எலும்புகளைக் கண்டெடுத்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்தியாவுக்கு இமயம் அரண். அது இல்லையென்றால் இந்தியா பனிப்பாலைவனமாகியிருக்கும்.

இமயம் பாறைகளாலான மலையல்ல! பெரும்பாலும் மண்தான். காடுகளை அழிப்பது, வேட்டு வைத்துச் சாலைகள் அமைப்பதுமே நிலச்சரிவுகளுக்குக் காரணம்.

இந்தியனுக்கு இமயம் வெறும் மலையன்று. இறை உறையும் திருக்கோயில். ஆன்மீகத் தலைவாசல். ஞானப் பாசறை. யோகத்தின் கொட்டடி. பக்திக்குத் தொட்டில். நாகரிகம், மனித நேயம் இவற்றின் ஊற்று. எழிற்கொள்ளை. கற்பனைகளின் களஞ்சியம். கவிதைக்குச் சவால். அந்தரங்கத்தின் பகிரங்கம். ரகசியங்களின் கருவூலம். உருவாய்த் தோன்றும் அருவத்தின் ஜாலம். நில்லாமல் நகராமல் நிகழ்கின்ற கூத்து. நிஜம் என்று நாம் போர்த்திக்கொண்ட பிரமைகளைத் தாக்கி நிர்மூலமாக்கி நின்று சிரிக்கும் பிரமிப்பின் உச்சம். கம்பீரத்தின் முழு வடிவம். கடவுள் வியக்கும் அழகு. ஆ! உள்ளே ஏதோ கொஞ்சம் தமிழிருப்பதால் இவ்வளவும் சொன்னேன்!

இமயத்தைப் பார்த்துவந்த பிறகே இந்தியன் என்ற பெயருக்குப் பொருள் புரியும்.

என் குருவின் திருவருளால், 1994ல் இருந்து இன்றுவரை 14 முறை இமயத்தின் பல்வேறு பகுதிகளைத் தரிசிக்கும் பேறு எனக்குக் கிட்டியது. ஒவ்வொரு முறையும் திரும்பிவந்த போதும், மறுமுறை எப்போது வாய்க்கும் என்று ஏங்கவைக்கும் இமயம்! கண்வழியே கன்னமிட்டு, உயிரையெல்லாம் தனதாக்கி, எண்ணமெல்லாம் தன் வண்ணமாக்கும் மாயக் காதலின் மகத்தான தலைநகரம் இமயம்!

நான் பலரோடும் சென்றபோதும், தனியாக மெய்சிலிர்க்கும் அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். இருமுறை, என் குருநாதர் என்னைத் தனியாக அனுப்பியபோது, வார்த்தைகளில் வடிக்கமுடியாத வாழ்வை வாழ்ந்து வந்திருக்கிறேன். ‘தனிமை கண்டதுண்டு, அதிலே சாரமிருக்குதம்மா’ என்பானே பாரதி. அந்தத் தனிமையின் மடியில் அகம் திறந்த சுகம் கண்டிருக்கிறேன்.

பனிப்பாளங்கள் உருகி ஓடும் ஓடையில் ஒரு பரவச வெறியில் உள்ளே இறங்கி, எப்படியோ உயிரோடு மீண்டிருக்கிறேன். ஒற்றையடிப் பாதை கூட இல்லாத காட்டில், எதற்கு-எங்கு என்றெல்லாம் தெரியாமல் நடந்தபோது, திடீரென காட்டுக் குளவிகள் கூட்டம் கூட்டமாக எதிரே வந்தும் ஒன்று கூட என்னைத்தொடாமல் சென்றதை எண்ணி வியந்து நின்றிருக்கிறேன்.

பாதையற்ற மலைச் சரிவொன்றில் இறங்கும்போது, வைக்கப்போன கால் யாராலோ இழுக்கப்பட்டது போல் அந்தரத்தில் நிற்க, கீழே சுருண்டு கிட்ந்த கரிய பாம்பினைக் கண்டு புன்னகைத்துச் சென்றிருக்கிறேன். உறக்கம் தேவையற்ற, உள்ளார்ந்த இரவுகளைக் கண்டிருக்கிறேன்.

ஒரு மின்மினிப்பூச்சி கூட மினுக்காத இருளில், மின்னல்கள் கருத்த வான்மீது சினமுற்று வாட்களாகிக் கிழிக்க, அண்டம் பொடிந்தது போல் இடியிடிக்க, சூறைக்காற்று பள்ளத்தாக்கில் இருக்கும் காடுகளைக் கதிகலங்கச் செய்ய, கால்பரப்பி, இடுப்பிலே கைகளை வைத்தபடி, அந்தக் களிநடனத்தைக் கண்டு களித்திருக்கிறேன்.

புத்தகங்களில் ஆஹா, ஓஹோ என்று பெரிதுபடுத்தப்படும் அதிசய அனுபவங்களை, அன்றாட நிகழ்ச்சிகளாகப் பார்த்திருக்கிறேன். கண்ணெதிரே பாறையுருண்டு காரோடு செத்துச் சிதறிய காட்சியைக் கண்டிருக்கிறேன். எந்தக் கல்வியாலும் எந் நாளும் நேரமுடியாத மனிதப் பண்பின் உயரங்களை, எழுதப்படிக்கத் தெரியாத ஏழைகளிடம் தரிசித்திருக்கிறேன். மலர்களோடு பேசி, அவற்றின் மறுமொழியால் உயிர்குளிர்ந்து போயிருக்கிறேன்.

தொடரும் இந்த அனுபவங்களோடு ஏதோ மூலையில் இருந்த என்னை எதற்காக இழுத்துவிட்டீர்கள்? குயில் மேடையேறுமா? நான் ஏன் இந்த வம்பில் சிக்கிக் கொண்டேன்?

சரி. மனதிலிருந்து எப்படி வருகிறதோ அப்படியே கவிழ்த்துவிட்டு ஓடிவிடுகிறேன். எனக்கு வேறு பாஷை தெரியாது.

வீதி நாடகத்தில் ஏது மேடைக் கூச்சம்?

(தொடரும் )

10.9.12

அசோகமித்திரன் - 82

விருட்சம் அழைக்கிறது.

அசோகமித்திரன் - 82

தலைமை : கி.அ.சச்சிதானந்தம்

உரை வழங்குபவர்கள்:
____________________________

இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, அம்ஷன்குமார், திலீப்குமார், ஞாநி, கல்யாணசுந்தரம், எஸ்.ராமகிருஷ்ணன், க்ருஷாங்கினி, லதா ராமகிருஷ்ணன், பத்மா, ராஜாமணி, குரு, இரா.முருகன், ஆர்.ராஜகோபாலன், ம.வே.சிவக்குமார், ரவி சுப்பிரமணியன், பழ.அதியமான், சுந்தர்ஜி, க்ளிக் ரவி, அழகிய சிங்கர், திருப்பூர் கிருஷ்ணன் ( அமுதசுரபி ), ஆர்.வெங்கடேஷ் ( கல்கி ), தேவிபாரதி ( காலச்சுவடு ), பத்ரி ( கிழக்கு ), மனுஷ்யபுத்திரன் ( உயிர்மை) 

சிறப்புரை : அசோகமித்திரன்

கூட்டம் நடக்குமிடம் :

பாரதியார் இல்லம், துளசிங்கப்பெருமாள் கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600005

தேதி : 22.09.2012 ( சனிக்கிழமை )

நேரம் : மாலை 5 மணி முதல்.

கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் ஒவ்வொருவரும் 5 நிமிடங்கள் அசோகமித்திரனைப் பற்றிப் பேச இசைந்திருக்கிறார்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

*******************************************

நண்பர்களே-

அசோகமித்திரனின் எழுத்துக்களோடு எனக்குக் கிட்டத்தட்ட 30 வருட பந்தமுண்டு. சினிமா பார்க்கவென்று அம்மாவிடம் பணம் வாங்கிக்கொண்டு , சினிமாவுக்குப் பதிலாக அசோகமித்திரனை வாங்கி வாசிக்கத் துவங்கிய தருணங்கள்தான் சங்கர்லால் மற்றும் இரும்புக்கை மாயாவிகளிடமிருந்து நான் பயணப்பட்டிராத வேறொரு மாய உலகுக்கு என்னைக் கூட்டிப்போயின. 

அவரின் ”வாழ்விலே ஒரு முறை”யை, குட்டி போட்ட பூனை போல நான் கழிப்பறையைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் தூக்கிச் சுமந்திருக்கிறேன்.  அநேகமாக என்னுடைய பைபிள் என்று சொல்லும் விதத்தில் என் மீது ஆளுமை செலுத்தியது அது. ”ஒற்றன்”, ”இன்று”, ”கரைந்த நிழல்கள்”, ”18வது அட்சக் கோடு” ஆகிய நாவல்கள் அது எழுதப்பட்ட நாட்களிலேயே மிகப் புதுமையான முயற்சிகள். அவற்றின் மீதான என் வியப்பும், வாசிப்பும் இன்னும் தணியவில்லை.

அசோகமித்திரன் ஒரு நல்ல கவிஞர் என்பதையும், அங்கதச்சுவை சொட்டும் ஆழமான எழுத்தாளர் என்பததையும் அவரின் உரைநடை சாட்சி சொல்லும். ஆனாலும் அவர் தனியாக இதுவரை கவிதைகள் எதுவும் எழுதியதில்லை என்பது மட்டும்தான் இன்று வரை நான் அசோகமித்திரனிடம் பெற்ற ஒரே ஏமாற்றம். 

பல சிறுகதைகளையும், பல நாவல்களையும், ஏராளமான -சிறுகதைகளைத் தூக்கிச் சாப்பிடும்- கட்டுரைகளும் எழுதிய அ.மி.யிடம் நான் கற்றுக்கொண்ட பாலபாடம் சிக்கனமாக, வார்த்தைகளை விரயம் செய்யாது எழுதுவது என்பதைத்தான். 

மதச்சார்பின்மை என்ற ஒரு கெட்ட வார்த்தை அடிக்கடி புழக்கத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில், தன் சுயநம்பிக்கைகளை, தன் சார்புகளை ஒரு இம்மியளவும் தன் படைப்புக்களில் திணிக்காத அ.மி.யிடம் தான் மதச் சார்பின்மை என்றால் என்ன என்பதோடு ஒரு எழுத்தாளனின் மூக்குநுனி எதுவரை  என்பதையும் நான் கற்றேன். 

அவரின் உடலுக்கு 82 வயது. அவரோடு எனக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டென்றாலும், பல தடவைகள் அவரோடு தஞ்சாவூரிலும், புதுச்சேரியிலும், சென்னையிலும் இருந்ததுண்டு என்றாலும், மேற்கண்ட நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டு 5 நிமிடங்கள் பேசுகிறேன் என்பது எனக்குக் கிடைத்த பேறு.

என்னை விடவும் நல்ல எழுத்துக்களை எழுதும், அ.மி.யை நேசிப்பவர்களுக்கும் மத்தியில் ஒரு வாய்ப்பு என்பது ஒரு ப்ரகாசமான நாளில் எனக்குக் கிடைத்த லாட்டரிதானே? 

”நவீன விருட்சம்”  அழகியசிங்கருக்கு என் ப்ரத்யேக நன்றிகள்.

வாய்ப்பு இருப்பவர்கள் அவசியம் நிகழ்ச்சிக்கு வாருங்கள். கிட்டாதவர்கள் அந்தக் கலைஞனை மனமார வாழ்த்துங்கள்.

இதுவரை அசோகமித்திரனை வாசிக்காதவர்கள் அதை வெளியில் சொல்லிக்கொள்ளாமல் இப்போதிலிருந்து வாசிக்கத் துவங்குங்கள்.

9.9.12

வேண்டாம் 71 (அல்லது) உலக நீதி ( I )


எப்படியெல்லாம் தலைப்பு வெச்சுப் படம் போட வேண்டியிருக்கு தூண்டில் போட்டு மீனைப் பிடிக்க?

இந்த வேண்டாம் 71- பற்றிச் சொல்லச் சொல்ல உங்களால் நம்பவே முடியாது . நீங்கள் போன தலைமுறையில் கூரைக்குக் கீழே கைகளைக் கட்டிக்கொண்டு  காது கிழிய ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் என்று பள்ளிக்கூடக் கூரைக்கட்டிடத்தையே கிடுகிடாய்க்க வைத்த அதே விஷயம்தான் இந்த வேண்டாம் 71.

கிட்டத்தட்ட உங்களுக்குப் புரிஞ்சு போச்சு. எந்தக் காலமென்றும், எந்த ஊரில் வாழ்ந்தார் என்ற சுவடுகளை எதுவும் விட்டுச் செல்லாத திரு.உலகநாதன், பிள்ளையார் சுழி போட்டு காப்பெழுதினாலும், தான் ஒரு அசைக்கமுடியாத முருக பக்தன் என்பதை,  அவர் எழுதிய பதிமூன்று எண்சீர் விருத்தச் செய்யுள்களின் ஈற்றடிகளிலும் மறவாமல் அடையாளம் காட்டுகிறார்.

எனக்கென்னவோ அவரின் பெயரும், அவரின் முருக பக்தியும் அவரை திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதியைச் சார்ந்தவராகவே அடையாளப்படுத்துகிறது என்றாலும் அவர் நம் அழகான தமிழுக்குச் சொந்தமானவர்.

ஒவ்வொரு செய்யுளிலும் தோராயமாக ஆறு ஆறு வேண்டாம்களை அவரது அனுபவத்தாலும், ஆழ்ந்த தத்துவச் செழுமையாலும் இன்றைக்கு வாசிக்கும்போது எப்படி இத்தனை தீர்மானமாக ஆணியடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இவரின் நதிமூலம் மட்டுமல்ல தமிழ்ச் சிந்தனையின் நதிமூலமும் சென்றடைவது 2000 வருஷத்துக்கு முந்தைய பாட்டன் வள்ளுவனின் வீட்டை நோக்கித்தானே!     

இனி உலகநீதியின் 71 வேண்டாம்கள் என்னென்ன என்று புகுந்து பார்க்கலாம். பயப்படவேண்டாம். ஒரு இடுகைக்கு 20 வேண்டாம்கள்.

வேண்டாம்-71

1. கற்றதையும், கற்க இருப்பவற்றையும் -மீண்டும் மீண்டும்- ஒவ்வொரு நாளும் படிக்காமல் இருக்க வேண்டாம்.

2.  யார் மீதும் வீண்பழி சுமத்தி சங்கடப்படுத்த வேண்டாம்.

3. தாயை எந்தச் சூழ்நிலையிலும் மறக்கவோ கைவிடவோ வேண்டாம்.

4. சொல்லும் செயலும் பொருந்தாத கயவர்களோடு சேர வேண்டாம்.

5.  செல்லத் தேவையில்லாத இடங்களுக்குப் போக வேண்டாம்.

6. ஒருவருக்குப் பின்னால் அவரைப் பற்றிய அவதூறுகள் சொல்லவேண்டாம்.

7.  பொய் என்று தெரிந்தும் அதைச் சொல்ல வேண்டாம்.

8. நிலையற்ற செயல்களை நிலைநிறுத்த முயலவேண்டாம்.

9. விஷத்துடனும், அதற்கு ஒப்பானவர்களோடும் பழக வேண்டாம்.

10. ஒத்த சிந்தனையும், நட்பின் தரமும் அறியாதவர்களோடு பழக வேண்டாம்.

11. தகுந்த துணையில்லாமல் நீண்ட பயணம் போகவேண்டாம். 

12. நம்பி வந்தவர்களை ஒருபோதும் கெடுக்க வேண்டாம்.

13. காலும், மனமும் போன போக்கில் போக வேண்டாம்.

14. முன்பின் தெரியாத மாற்றானை உறவாக நம்ப வேண்டாம்.

15. உழைத்து உண். உபரி செல்வத்தைப் பயன்படாது புதைத்து வைக்க வேண்டாம்.

16. தர்மங்களை போதி. கடைப்பிடி. ஒருபோதும் கைவிட வேண்டாம்.  

17. கோபத்தால் பெரும் துன்பங்களைத் தேடிக்கொள்ள வேண்டாம். 

18. நம்மீது நெடுநாள் கோபமாயிருப்பவர்கள் வாசலை மிதிக்கவேண்டாம்.

19. பிறரின் குற்றங்களைப் பெரிதுபடுத்தி வாழ வேண்டாம்.

20. கொலை, களவு செய்யவோ, செய்பவர்களோடு பழகவோ வேண்டாம். 

( சொச்சம் 51ம் தவணைகளில்- வரும் இடுகைகளில்)  

இந்த இடுகையின் தொடர்ச்சியை வாசிக்க இந்த இணைப்பைச் சுட்டவும்.


http://sundargprakash.blogspot.in/2012/09/71-ii.html

8.9.12

ஒரு புத்தகமும் சில புகைப்படங்களும்


“ சப்தத்துடன் ஓடும் நதி - துள்ளிக் குதித்து ஆரவாரத்துடன் ஓடும் சிறுமியைப் போல் சென்றுகொண்டிருந்தது”  பக்.39ல் கவிதையாய்த் தென்பட்ட இந்த வரிதான் ”கைலாஸ் மானசரோவர் யாத்திரை” என்ற இந்தப் புத்தகத்தை என்னை வாங்க வைத்தது. 

”இதற்கு மேல் ஒரு தீர்த்தயாத்திரை இல்லை” என்ற பெருமையுடன் புராண காலத்திலிருந்தே குறிப்பிடப்படுகிற கைலாஸ் - மானஸரோவர் யாத்திரை அனுபவங்களை மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் தலைவரும்,” ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்”  மாதப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான ஸ்வாமி கமலாத்மானந்தர் எழுதி அது ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில் 1998ல் இருந்து தொடர் கட்டுரையாக நான்கு ஆண்டுகள் வந்தது.

புறப்பட்டதில் இருந்து எங்கெங்கு தங்கினோம், எதையெல்லாம் பார்த்தோம், நம் நாட்டிற்கும் சீனா, திபேத்திற்குமான நேர வித்யாசம் எவ்வளவு, கிடைக்கும் பொருட்கள், இரு இடங்களுக்கிடையேயான தொலைவு, எங்கே நாம் நம்மை எப்படித் தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேடினால் கிடைத்துவிடக்கூடிய தகவல்கள் மட்டுமல்ல ஒரு யாத்திரை.   

ஒரு யாத்திரை என்பது எப்படிப்பட்ட அனுபவம்? எத்தனை எத்தனை விதமான ஆன்ம தரிசனங்களையும், பரவசமூட்டும் கோணங்களையும் தந்திருக்க முடியும்? ஆனால் என்ன துரதிர்ஷ்டம் பாருங்கள் - இந்த முழுப் புத்தகத்திலும் புறவயமான அனுபவங்களைப் பற்றி மட்டுமே நான் படிக்கமுடிந்தது. 

ஆனாலும் அவர் பார்வையிலிருந்து கிடைத்த சில சுவாரஸ்யமான தகவல்களைக் கீழே பகிர்ந்து கொள்கிறேன்.

”பசுபதிநாத் கோயில் நேபாளத்தில் இருந்தாலும் இந்தியர்தான் அங்கே தலைமை பூஜாரியாக இருக்கவேண்டும் என்ற நியதி உள்ளது. சிருங்கேரி சங்கரமடத்தின் பரிந்துரையின் பேரில் தலைமை பூஜாரியை நேபாள மன்னரே நேரடியாக நியமிக்கிறார். இது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், நாட்டின் பிரதம மந்திரியையும், பசுபதிநாத் கோயில் தலைமை பூஜாரியையும் மட்டுமே மன்னர் இவ்வாறு நேரடியாக நியமிக்கிறார்”. (பக்கம் 24-25)

”25.5.98 ஒன்றரை மணி நேரம் பிரயாணம் செய்த பிறகு, ஸேன்-போ நதிக்கரையை அடைந்தோம். இந்த நதியே இந்தியாவிற்குள் வரும்போது பிரம்மபுத்திரா என்று பெயர் பெறுகிறது. இந்தியாவிலுள்ள ஆறுகளைப் பொதுவாக ‘பெண்’ என்று கூறுவதே நம் நாட்டு வழக்கம். இதற்கு மாறாக, பிரம்மபுத்திரா ஆறு ஆண் என்று கருதப்படுகிறது” (பக்கம்-56-57)

“கற்கள் சிதறிக் கிடப்பதை எந்த திபேத்தியன் பார்த்தாலும் உடனே அவற்றை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கத் தொடங்கிவிடுகிறான். பெரிய கற்களைக் கீழே வைத்து படிப்படியாகச் சிறிய கற்களை மேலே வைக்கிறான். அரையடி அல்லது ஓரடி உயரத்தில் இவை கூம்பு வடிவத்தில் வழியெங்கும் உள்ளன. இதற்கு திபேத்தியர்கள் அளிக்கும் விளக்கம் மிகவும் பொருள் பொதிந்தது. இந்தக் கூம்புகள் அவற்றை அமைப்பவனின் பிரதிநிதிகள். தங்கள் பிரதிநிதியாக, அந்தக் கூம்புகள் எப்போதும் கயிலையை வழிபட்டுக்கொண்டிருப்பதாகவும், அந்தப் பலன் தங்களை அடையும் என்றும் திபேத்தியர்கள் உறுதியாக நம்புகிறார்கள்” (பக்கம்-49)

திபேத்தியர்களின் ஏழ்மையையும், திபேத்தியர்களை அடிமை போல் நடத்தும் சீன அரசின் அநியாயத்தையும் பல இடங்களில் குறிப்பிடுகிறார். இந்து மதத்தின் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும், ஈடுபாடும் கொண்ட ஆலன் மிரன் என்ற ஆஸ்த்ரேலியர் ஒருவருடனான சந்திப்பு மறக்க முடியாதது என்று சிலாகிக்கிறார்.

ஒரு பயணத்துக்குத் தேவையான எல்லாத் தகவல்களும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறன. அவருடன் சென்ற குழுவினருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், ஆபத்து நிறைந்த விறுவிறுப்பான சந்தர்ப்பங்கள், புராணங்களில் இருந்து சுட்டிக்காட்டப்படும் இடங்களின் விவரங்கள் என்று நிறைய இருந்தன.  

ஆனாலும் ஒரு துறவியின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட இந்தப் புத்தகம் இன்னும் அதிகமாக உள்வயமாகப் பயணப்பட்டிருக்கும் என நம்பினேன்.

இந்தப் புத்தகத்தைக் கீழே வைத்துப் பல மணி நேரங்களாகியும், என்னை இன்னும் புகை போல் வட்டமிட்டுச் சுற்றிக்கொண்டிருக்கின்றன ஒரு துறவியால் எழுதப்பட்ட கீழேயுள்ள இந்த இரு வாக்கியங்கள்.

“21.5.98 காலையில் எழுந்து வெந்நீரில் குளித்தேன். மீண்டும் இதுபோல் மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் - யாத்திரை முடிந்து திரும்பி வரும்போதுதான் - சோப்புப் போட்டு நன்றாகக் குளிக்கமுடியும் என்று நினைத்துக்கொண்டேன்.” (பக்கம்-37)

“அந்த ஹோட்டலில் சுமார் 25 நாட்களுக்குப் பிறகு நான் வெந்நீரில் நன்றாகச் சோப்புப் போட்டுக் குளித்தேன்.” (பக்கம்-156)

(கைலாஸ் மானசரோவர் யாத்திரை- சுவாமி கமலாத்மானந்தர்- ஸ்ரீராமகிருஷ்ண மடம்- பக்.185- ரூ.50)

(இந்த கைலாஸ் - மானசரோவர் யாத்திரை வீடியோ கேசட்டாகவும், VCD ஆகவும் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தால் வெளியிடப்பட்டுள்ளது)

______________________________________________________

தஞ்சாவூர்க்கவிராயர் வீடு திரும்பி விட்டார்.


அவரும் நானும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் சில.



தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...