31.7.12

9. யுவ - தக்ஷிணாயனம்


















தீக்ஷை கொடுப்பதில் மூன்று விதமுண்டு. 

1.ஸ்பர்ஸ தீக்ஷை. 2. நயன தீக்ஷை. 3.மானஸ தீக்ஷை.

சீடனைத் தொட்டு ஆசிர்வதித்து தீக்ஷை கொடுப்பது ஸ்பர்ஸ தீக்ஷை. 

வார்த்தை எதுவும் உதிர்க்காமல் ஞானம் ததும்பும் பார்வையால் தீக்ஷை கொடுப்பது நயன தீக்ஷை. 

எங்கோ இருந்துகொண்டு எல்லாம் நல்லதாக அமையவேண்டும் என மனதால் நினைத்து தீக்ஷை கொடுப்பது மானஸ தீக்ஷை.

இவற்றிற்கு கோழி, மீன், ஆமை ஆகியவை முட்டையிட்டு 
அடைகாப்பதை உவமையாகக் கூறலாம். 

கோழி தன்னுடைய முட்டைகளின்மீது அமர்ந்து அடைகாக்கும். இது குக்குட தீக்ஷை. (குக்குடம்-கோழி)

மீன் முட்டையிட்டுவிட்டு முட்டைகளை உற்று நோக்கியவாறு அங்கு 
மிங்கும் நீந்திக்கொண்டிருக்க குஞ்சுகள் முட்டை பொறிந்து வெளிவரும். இது மத்ஸ்ய தீக்ஷை.(மத்ஸ்யம்- மீன்)

ஆமை ஏதோ ஒரு கடற்கரையில் குழிதோண்டி முட்டையிட்டு 
விட்டுக் கடலில் இறங்கி ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் 
தன்னுடைய இருப்பிடம் நோக்கி நீந்திச்செல்லும். அப்போது மனதால் தான் இட்ட முட்டைகளை நினைத்தபடியே இருக்க முட்டைகள் பொறிந்து குஞ்சு வெளிவரும். இது கமட தீக்ஷை.(கமடம்-ஆமை)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உங்களுக்கு தெலுங்கு அட்சர சுத்தமாக வாசிக்கமுடிந்தால் மட்டுமே இந்த அத்யாயத்தை வாசிக்கமுடியும். தெலுங்கு வாசிக்கத் தெரியாதவர்கள் போனால் போய்த் தொலைகிறதென்று இந்த ஒன்பதாவது அத்யாத்தை விட்டுக் கடாசி விடுங்கள்.

மாலை நேரத்தின் வெயில் சரிவாக விழுந்துகொண்டிருக்கும்போது நெல்லூரில் நீங்கள் இந்தத் தெருவில் நுழைந்திருக்கக் கூடாது. ஒரே இரைச்சலும் தூசியும் தும்பட்டையும்.

எத்தனையோ தரம் சொல்லியும் கேட்காமல் தெருவில் மாடுகளைக் கட்டி பால் கறந்தபின் மாடுகளை அவிழ்த்துக்கொண்டு போகும் பால் வியாபாரிகள்- சாயங்காலம் சந்தைக்கான ஆயத்த வேலைகளில் இறங்கும் சந்தைக் கடைக்காரர்கள் இவர்களுக்கு நடுவில் சிக்கிக் கொள்வது ஒரு என்.டி.ராமராவின் வண்ணப் படத்தில் சிக்கிக் கொள்வதற்குச் சமமானது.

பரவாயில்லை. மூக்கை- தோளில் கிடக்கிறதே துண்டு- மூடிக்கொண்டு தெருவெல்லாம் கிடக்கும் எருமைச் சாணியை மிதிக்காதவாறு தாண்டி வந்து வலது புறம் திரும்பிவிட்டால் என் வீடு தெரியும்.

வாசலில் இருக்கும் அழைப்புமணியை அழுத்தினீர்களா? இல்லையென்றால் இதைப் படித்த பின் அழுத்தவேண்டாம். அது வேலை செய்யாது. ரெண்டு தரம் முஷ்டியை மடக்கி கதவில் தட்டினால் யாராவது திறக்க வருவார்கள். வெளியிலிருந்துதான் ஒரு கதவு. கதவு திறக்கப்பட்டு விட்டால் அது பத்து குடித்தனங்களுக்கான பரமபத வாசல்.

நிச்சயமாக நான்கைந்து குழந்தைகள் மூக்கை உறிஞ்சியபடி ஒன்றோடு ஒன்று மல்லுக்கட்டிக்கொண்டிருக்கலாம். பூட்டியிருக்கும் ஏதாவது ஒரு குடித்தனத்து வீட்டு விவகாரங்களை சத்தமாக சுதந்தரமாக வம்பளந்து கொண்டிருக்கும் இன்னொரு கும்பல். அதெல்லாம் இருக்கட்டும். காய வைத்திருக்கும் விறகுக் கட்டைகள்,  சாம்பார் பொடிக்கு அரைக்க முறத்தில் வைத்திருக்கும் சாமான்கள் சூழ கடைசியில் கிணற்றடி. அதற்கெதிரே வெந்நீர் போடுவதற்கான இருட்டறை போல ஒரு பாகம் தெரிகிறதல்லவா அதில்தான் சாமிநாத ஐயரின் ஜாகை. செல்லமாக சாமாண்ணா.ரொம்பவும் ஆசைப்பட வேண்டாம். நாம் இப்போது சாமாண்ணாவின் வீட்டுக்குள் நுழையப்போவதில்லை.

சாமாண்ணா சமையல்வேலை செய்யக்கூடிய ஒரு ஜெகஜ்ஜாலக் கில்லாடி. அவரிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தால் சில சமயம் நீங்கள் மறைந்துபோய் அவர் மட்டுமே இருக்கக் கூடிய காட்சிகளை உருவாக்கி விடுவார். மனிதர் சரியான போஜனப் ப்ரியர். வக்கணையாக அவர் விவரிக்கிற ஒவ்வொரு மெனுவையும் கேட்கும்போது ‘என்ன இப்படி நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு அலயறீங்களே?’ என்ற கேள்வியை யாராவது கேட்டுவிட்டால் சிரித்துக்கொண்டே- 

“நான் விதரணையா சாப்ட்டு ரொம்ப நாளாச்சுடா. ஒரு கை மோருஞ்சாதம்.அவ்ளவுதான். எப்பிடிச் சமைக்கணும்-சாப்டணும்னு பேசறதுல ஒரு அலாதி போதையிருக்குடா.அது ஒனக்குத் தெரியாது.  மனுஷன் ஒழைக்கிறதே அதுக்குத்தானே? ரசிச்சு ருசிச்சு சாப்ட்றதுல என்ன வெக்கம் வேண்டிக்கெடக்கு?” என்று எதிர்க்கேள்வி மூலமாக பதில் சொல்லி வாயை அடைத்து விடுவார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சாமாண்ணாவுக்குக் கல்யாணம் ஆகவில்லை. பண்ணிக்கொள்ள ஆசையில்லை. ஒரு தேசாந்திரி மாதிரி அலையக்கூடிய அவரிடம் எந்தப் பொண்ணும் சிக்கிக் கொள்ளாமல் போனதும் ஒருவிதத்தில் நல்லதுக்குத்தான் என்று அக்கம்பக்கத்தினர் அவர் இல்லாத போது பேசிக்கொள்வார்கள். ஆனால் சாமாண்ணா இந்தியா முழுதும் சுற்றி வருவதற்காகவே சம்பாதிக்க வேண்டியிருந்தது. கையில் காசு குறைவது போலத் தோன்றினால் நெல்லூரில் டேரா அடித்து மறுபடியும் கல்யாணம் கார்த்திகையென்று காண்ட்ராக்ட் எடுத்து சம்பாதித்துக்கொண்டு மறுபடியும் ஊர்சுற்றக் கிளம்பி விடுவார்.

அவர் கைக்கென்று தனி மணம் இருக்கத்தான் இருந்தது. ஆனாலும் அவருக்கென்று இருக்கும் கிராக்கியைத் தக்கவைத்துக்கொள்ளவும் அவர் விரும்பியதில்லை. ஆர்டர் கிடைத்தால் போதும். அவரிடம் வேலை செய்ய நான் நீயென்று போட்டிபோட்டுக்கொண்டு வந்துவிடுவான்கள். உட்கார்ந்த இடத்திலேயே வேண்டிய சாமான்களுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு, சமையல் பாத்திரங்களுக்கும் ஏற்பாடு பண்ணிவிட்டு ஜாரிணிக் கரண்டியோடு கிளம்பிவிடுவார். 

அடுப்பில் நெருப்பைக் குறை பருப்பு தீயறது பார்- தேங்காயை சரியா அரைச்சு விட்டியா- பாகுபதம் வந்தாச்சா?- அப்பளத்தை வெளுப்பாப் பொரிச்செடு--வடைக்கு மொழுக்குன்னு அரைக்காதே-கொஞ்சம் கரகரப்பா அரை-வடையைப் போட்டதுக்குப் பின்னாடி அந்த எண்ணையிலேயே கடைசியா மோர்மொளகாவப் பொரிச்சுடு- கூட்டுக்கு பருப்பு நன்னா வெந்திருக்கா பாரு-சாதத்தை நன்னா வேகவிட்டு வடிச்செடு-மணிக்கு ஒரு கைக்கு நாப்பது ஜாங்கிரின்னு ரெண்டு கையால எண்பது ஜாங்கிரி புழிவேன். கோழி பேண்டது கணக்கா நீ என்னடா தடவறாய்?  என்று சகட்டுமேனிக்குக் குரல் கேட்டுக்கொண்டிருக்கும். 

இலையில் பரிமாறும்போது கண்பார்வையிலேயே யாருக்கு என்ன வேண்டுமோ அதுக்கான உத்தரவு பறக்கும். பந்தில ரெண்டாவது வரிசை அந்தத் தாத்தாவுக்குத் தெளுவா ஒரு டம்ளர் ரசம் கொடு. அந்த மாமிக்கு டயாபட்டீஸோ என்னவோ ஏதுக்கு ஸ்வீட்டை வேஸ்ட் பண்றாய்? அங்க ஒரு புள்ளையாண்டன் விக்கறான் பாரு ஜலம் இருக்கா பாரு- ரசத்துக்கப்புறம் பாயசம் விடு சீக்கிரம் என்று அந்த உத்தரவுகளைக் கேட்க ரெண்டு காது போதாது.

எல்லாம் முடிஞ்சுதா. கட்டுசாதக்கூடைல மொளகாப்பொடி தடவின இட்லி. புளியஞ்சாதம், தயிருஞ்சாதம், பொறிச்ச வடாம், நார்த்தங்கா ஊறுகா, கூடவே கொஞ்சம் புளிக்காச்சலும் வெச்சுருக்கேன் மாமா. ரயிலுக்கு முன்னாடியே போறவா அம்பது பேருக்கு தனியா கைல கட்டிக்கொடுத்துட்டேன். எல்லாம் நெறைவா இருந்ததுன்னா நான் உத்தரவு வாங்கிக்கறேன் என்று வெற்றிலையும் பன்னீர்ப் புகையிலையும் மணக்க பவ்யமாகக் கேட்கும் போது ஒரு தாம்பாளத்துல வெத்தலை பாக்கோட அவர் கேட்டதை விட ஒரு ஆயிரம் ரூபாய் கூட வெச்சுக் கொடுங்கோன்னா என்று வீட்டுப் பெண்மணிகளின் நிறைந்த மனதுடனான வார்த்தை இறுதியாய் ஒலிக்கும்.  

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சாமாண்ணாவின் இரவுகள் மிகவும் புதிரானதாய் இருக்கும் என்றும், அவரின் ஜாகையில் அவர் தங்கியிருக்கும் நாட்களில் விதவிதமான சப்தங்களும், குரல்களும் கேட்பதாய் இரவில் உறக்கம் வராத பெரியவர்கள் மறுநாள் பேசிக்கொள்வார்கள். எனக்கென்னவோ பொழுதுபோகாமல் அவர்கள் அப்படிப் புரளி கிளப்புவதாகத் தோன்றும். 

சாமாண்ணாவுக்குச்  சமையல் போலவே சங்கீதத்திலும் அலாதியான ஈடுபாடு. த்யாகராஜ பாகதவர், கிட்டப்பா, மஹாலிங்கம், சுந்தராம்பா பாட்டுக்கள்தான் அவரின் பரம இஷ்டம். ஒரு பழைய க்ராமஃபோன் உண்டு. ஏராளமான எல்.பி. இசைத்தட்டுக்கள் வைத்திருப்பார். அவர் க்ராமஃபோனில் சங்கீதம் கேட்பது அத்தனை மதுரமாயிருக்கும். அவர் கேட்பது வெளியில் யாருக்கும் கேட்காது அத்தனை பரம ரகஸ்யமாய் அத்தனை சௌக்யமாய் இருக்கும் அவர் ரசனை. கூடவே மெல்லிசான ஒரு குரலில் ஸ்ருதி விலகாது அவர் குரலும் இழைந்துகொண்டிருக்கும். அப்படி சாவி கொடுக்காமல் குரல் இழுத்தபடியே அவரும் உறங்கியிருக்க இரவுகள் விழித்திருக்கும் அற்புதமாய்.

ஒருநாள் அவருடன் தூக்கம் வராமல் நானும் பேசிக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு பழைய கடிகாரத்தை பழுது பார்த்துக்கொண்டிருந்தார். மங்கலான வெளிச்சம். என்னடாம்பி! தூக்கம் வல்லியோ என்றார். தலையாட்டினேன். ஒனக்கு பேய் பிசாசுகள் மேலே நம்பிக்கையுண்டோ? என்றவாறு என்னை நிமிர்ந்து பார்க்க எனக்குக் கொஞ்சம் பயமாயிருந்தது. 

என்ன பதில் சொல்லவென்று தோன்றாமல் விழிக்க, ”அதுகள் எதையாவது பாத்துருக்கையா” என்றார் தொடர்ந்து.பேச்சு போகும் திசை பிடிக்காமல் மெல்ல எழுந்து தண்ணீர்ப் பானையிடம் போய் தண்ணீர் குடித்துவிட்டு வெளியே நழுவப் பார்த்தேன். ஒரே எவ்வலில் என்னை எட்டிப் பிடித்தார். ஒக்காருடா நழுவப் பாக்கறியே எம்ட்டனாட்டமா என்று பிடித்திழுத்து உட்காரவைத்தார். 

அது க்ருஷ்ண பட்சத்து இரவு. அதாவது தேய்பிறை. மைபோல அப்பியிருந்தது இருள். வெளியில் கொட்டிக்கொண்டிருக்கிற பனியின் ஊடே எந்த வெளிச்சமும் தராமல் ஒரு பத்து வாட் விளக்கொன்று மினுங்கிக் கொண்டிருந்தது. யாரோ கிணற்றில் தண்ணீர் சேந்திவிட்டுப் போன ஜகடை சப்தம் தேய்ந்திருந்தது. நான்கு குடித்தனம் தாண்டி அந்தப் புடவை வியாபாரியும் கீச்சிடும் சைக்கிளைத் தள்ளிக் கொண்டுவந்து நிறுத்திவைத்ததும் கேட்டது.

நிமிர்ந்து சாமாண்ணாவைப் பார்க்க அவர் அங்கு இல்லாததை அப்போதுதான் கவனித்தேன். பக்கத்து அறையில் ஏதோ மெலிதான பேச்சுக்குரல் கேட்டது. மெல்ல எட்டிப் பார்த்தேன். ஐயோ! ஏழடி உயரத்துக்கு ஒரு பருத்த உடல்வாகு கொண்ட பெண் வெற்றிலைக்காவி படிந்த பற்களுடன் என்னைப் பார்த்து சிரிப்பது கண்டு சப்த நாடியும் அடங்கிப்போய் கத்திவிடக் கூடாது என்று வாயைக் கையால் பொத்திக்கொண்டேன். எதிரே உட்கார்ந்து தலையில் அடித்துக்கொண்டு சாமாண்ணா மெலிதாக அழுதுகொண்டிருந்தார். அந்தப் பெண் என்னைப் பார்த்துச் சிரித்த சிரிப்பை என்னால் மறக்க முடியாது. அது முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் விகாரமான சிரிப்பு. இல்லை இளிப்பு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

போன வாரம் நான் வேறேதோ கல்யாணத்துக்காக விஜயவாடா வரைக்கும் போய்த் திரும்பியிருந்தேன். சாமாண்ணா வீட்டின் கதவை எதேச்சையாகப் பார்த்தபோது பூட்டியிருந்தது. ஊரில் இல்லை.ஹரித்வார் போயிருக்கிறார். வீட்டுச் சாவியை நான் ஊரிலிருந்து வந்த பின் என்னிடம் கொடுக்கச் சொல்லியிருந்ததாக பக்கத்து வீட்டு பீமாராவ் வந்து கொடுத்தார். சாவி ஜில்லென்றிருந்தது. 

வெளியில் இருந்த வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு ட்ரங்க் ரோட் கோமள விலாஸில் சாப்பிட்டு விட்டு எதிரில் பீடா போட்டுக்கொண்டு வீடு திரும்பியிருந்தேன். அப்படி என்னதான் நடக்கிறது சாமாண்ணாவின் இரவுகளில்? சாவிதான் கையில் இருக்கிறதே! தைர்யமாய்த் தங்கித்தான் பார்த்துவிடுவோமே என்று முடிவு செய்து என்னிடம் இருந்த சைகால் மன்னாடே இசைத்தட்டுக்களை எடுத்துக்கொண்டு ஒரு செம்பில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு சாமாண்ணாவின் வீட்டுக் கதவைத் திறந்தேன்.

க்ராமஃபோனில் மன்னாடே மெலிதாய்ப் பாடிக்கொண்டிருக்க குப்புறப் படுத்த படி விட்டுப்போன ஒரு நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். கோமளவிலாஸின் ரசம் ப்ரமாதம். சாமாண்ணா இருந்தால் அவரிடம் இதைப் பற்றிப் பேசலாம். ரசத்துக்குத் தூக்கலா கொத்தமல்லிய அரைச்சு விட்ருக்காண்டா!இதென்ன ப்ரமாதம்! நாளைக்கி நான் வெச்சுக்காட்றேம் பாரு. அப்றம் சொல்லு ஒன்னோட கோமளவிலாஸத்து புராணத்தை! என்று விறைப்பாய் ஒரு பதில் வரும்.

நினைத்துக்கொண்டிருக்கும் போது பின்னறைக் கதவை யாரோ சுரண்டுவது போல ஒரு மெல்லிதான கீறல் சப்தம். உற்றுக் கவனித்தேன். முதலில் எலியாய் இருக்கலாம் என்று அலட்சியப் படுத்திவிட்டு மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

காது கேக்கலியா கூப்பிட்றது? என்று கட்டையான பெண்குரலில் உலுக்கினாற் போல எழுந்தேன். தலை இடிக்காமல் வளைந்து குனிந்தபடி அதே ஏழடிப் பெண்மணி. ரத்தச் சிவப்பில் புடவைக்குப் பொருத்தமாய் உக்ரமான பார்வையும், விகாரமான இளிப்புடனும். சாப்பிட என்ன இருக்கு? என்றாள். என் நாக்கு புரளவில்லை. சாமாண்ணா ஊரில் இல்லை என்ற தகவல் அவளுக்குத் தெரியாதோ? சொல்லிவிடலாம் என நினைத்து வாயைத் திறக்க நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது.

அவளுக்குப் பின்னால் சிரித்தபடி கையில் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியபடிக்கு சாமாண்ணா நின்று கொண்டிருந்தார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எனக்கு இரண்டு நாட்களாகவே நல்ல காய்ச்சல். ஒரே உளறலோடு நினைவே இல்லாமல் அனத்திக்கொண்டிருந்ததாக பீமாராவ் சொல்லித் தான் தெரிந்தது. வாயெல்லாம் வறண்டு போயிருந்தது. நாக்கெல்லாம் பித்தக் கசப்பு. கண் எரிச்சல் ஒரு புறம். உடலெல்லாம் முறுக்கிப் போட்டது போல அப்படி ஒரு வலி. 

ஜன்னல் வழியாக இரவு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாமியிடம் சொல்லி அரிசிக் குருணையில் கஞ்சி போட்டுக்கொண்டு வந்து குடிக்கும்படி வற்புறுத்தினார் பீமாராவ். ருசி தெரியவுமில்லை. பிடிக்கவுமில்லை. ஆனால் அந்தச் சூடான கஞ்சி தொண்டையில் இறங்குவது பிடித்திருந்தது.

வாசலில் ஒரே இரைச்சலாயிருந்தது தலையை வலித்தது. யாரோ வண்டிக்காரனிடம் சொன்ன வாடகையை விடக் கூடுதலாய் கேட்கிறானென்று கூப்பாடு. புடவை வியாபாரியின் குரல்தான் உரத்துக்கேட்டது.

 மெல்லச் சாய்ந்து கட்டிலில் உட்கார்ந்தபடி இருக்கையில், என்னுடைய வீட்டைக் கடந்து யாரோ செல்வது போலத் தெரிந்தது. திடீரென என்னைக் கண்டதும் திரும்பி உள்ளே வந்தால் அது சாமாண்ணா.

என்னாச்சு மாதவா? ஜொரமா? இப்படிக் கொதிக்கறதே? என்று நெற்றியில் கைவைத்துப் பார்த்தவர், ”கொஞ்சம் இரு. நெத்திலயும், மார்லயும் சுக்குப்பத்துப் போட்டா சரியாப் போய்டும். அரைச்சு எடுத்துண்டு வரேன்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

அவருக்குப் பின்னால் யாரோ கூடவே செல்வது போலவும், சடாலென்று திரும்பி என்னைப் பார்ப்பது போலவும் உணர்ந்தேன்.

சற்றைக்கெல்லாம் அலறி அடித்துக்கொண்டு பீமாராவ் ஓடிவந்தார்.

”மாதவா! சாமாண்ணா ரெண்டு நாளைக்கு முன்னாடி ஹரித்வார்ல காலமாயிட்டாராம். பாடிய வாங்கிக்கிறீங்களா? இங்கேயே தகனம் பண்ணிடலாமா?ன்னு கேட்டு தந்தி வந்திருக்குப்பா!”

28.7.12

இன்றைய கல்கியில் “புராதன நாற்காலி”


இந்த நாற்காலி
யாருக்காகவும் காத்திருக்கவில்லை.

அதன் இருக்கை யாரும் அமரா
வெற்றிடத்தைப் பருகியபடி இருக்கிறது.

உங்கள் பார்வைக்குத் தப்பிய கண்ணாடியில்
தன் முகத்தை நீண்ட நாட்களுக்குப்பின்
பார்த்து ரசிக்கிறது.

பின்னும் முன்னும்
பேசப்படாத வார்த்தைகளையும்
பேசப்பட்டவைகளையும் அசை போடுகிறது.

பரபரப்பின் வெம்மையைத் துறந்து
நிதானத்தின் துள்ளலைப்
பூசிக்கொண்டிருக்கும்போது
உள்ளே நுழைந்துவிடாதீர்கள்.

எந்த இசையும் ஒலிக்கப்படாத நிசப்தத்தை
அது அனுபவிக்கவிடுங்கள்.

இங்கிருந்து நாளையோ மறுதினமோ
அது அகற்றப்படும் வரை
இந்த ஏகாந்தத்தை அது அணிந்து மகிழட்டும்.
நன்றி- கல்கி- 05.08.2012

24.7.12

பரிவின் இசை விடைபெறுகிறது.


என்னுடைய கலை ஆர்வத்தைத் தணித்துக்கொள்ளவே இரண்டு வலைப்பூக்களை நிர்வகித்து வந்தேன்.

இரு விதமான டெம்ப்ளேட், இரு விதமான லே அவுட், ஒவ்வொரு ப்ளாகிலும் வெவ்வேறு விதமான தளம் என யோசித்துத்தான் கைகள் அள்ளிய நீர் பெருகியதும், பரிவின் இசை ஒலித்ததும்.

ஆனால் இதற்கு மேலும் -இந்த ஆர்வத்துக்காக மட்டும் - இரட்டைக் குதிரைகளை ஓட்ட முடியுமென்று தோன்றாததால்-

பரிவின் இசை விடைபெறுகிறது. 

இனி நம் கூடாரம் கைகள் அள்ளிய நீர் (www.sundargprakash.blogspot.in) மட்டுமே.

பொருத்தமாக பரிவின் இசையில் கடைசியாக ஒலித்தது ”நிசப்தத்தின் ஒலி”.

பரிவின் இசையைக் கேட்ட உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்.

23.7.12

ஹா! என்னமா ஒரு கவிதை!


நேற்றிரவு உறங்குவதற்கு முன்னால் சச்சிதானந்தனின் ”தாவோ க்ஷேத்ரத்தில் போகேண்டதெங்ஙனெ?” என்ற அற்புதமான மலையாளக் கவிதையின் மொழிபெயர்ப்பை வாசித்தேன்.

மொழிபெயர்த்தது ப்ரபல எழுத்தாளரும், நண்பருமான இரா.முருகன். 

கவிதையின் மூலத்தைச் சிறிதும் சிதைக்காத அற்புதமான மொழிபெயர்ப்பு. மலையாள மொழிக்கும் தமிழுக்குமான நெருக்கமும், தத்துவச் செழுமையும் இந்தக் கவிதையை மறுபடி மறுபடி வாசிக்க வைத்தபடி இருக்கிறது. இந்தக் கவிதையை எப்படிக் கடப்பது என்று தெரியவில்லை கடவுளே!

இந்த அனுபவத்தைத் தந்து என்னைக் கிளர்த்திய சச்சிதானந்தனுக்கும், இரா.முருகனுக்கும் மானஸீகமாக என் நமஸ்காரங்கள்.

தாவோ கோவிலுக்கு எப்படிப் போவது ?

வீட்டைப் பூட்டாதே.
விடியலின் பள்ளத்தாக்கில்
இளங்காற்றில் இலைபோல்
கனமில்லாமல் போ.

வெளுத்த மேனியென்றால்
சாம்பல் பூசி மறைத்துப்போ.
அதிகம் அறிவுண்டென்றால்
அரைத் தூக்கத்தில் போ.

வேகம் மிகுந்தது
வேகம் தளரும்.
மெல்லப் போ.
நிலைத்தது போல் மெல்ல.

நீர்போல் வடிவமற்று இரு. 
அடங்கி இரு. 
உச்சிக்கு உயர
முயலவே வேண்டாம்.

பிரதட்சிணம் செய்யவேண்டாம்.
வெறுமைக்கு இடம்வலமில்லை
முன்னும் பின்னுமில்லை.

பெயர்சொல்லி 
அழைக்க வேண்டாம்.
இவன் பெயருக்குப் பெயரில்லை.

வழிபாடுகள் வேண்டாம்.
வெறுங்குடத்தோடு போ.

நிறைகுடத்தைவிட 
சுமக்க எளிது. 

பிரார்த்திக்கவும் வேண்டாம்.
கோரிக்கையோடு 
வருகிறவர்களுக்கான 
இடமில்லை இது.

பேசியே ஆகவேண்டுமானால்
மவுனமாகப் பேசு.
பாறை மரங்களோடு 
பேசுவதுபோல்
மரங்கள் பூக்களோடு
பேசுவதுபோல்.

மிக இனிய ஒலி மெளனம்
மிகச் சிறந்த நிறம்
வெறுமையினது.

நீ வருவதை யாரும் 
பார்க்க வேண்டாம்.
திரும்பிப் போவதையும்
பார்க்க வேண்டாம்.
குளிரில் ஆற்றைக் கடக்கிறவன் போல்
சுருண்டு குறுகிக் கோபுரம் கடந்து போ. 

உருகும் பனித்துளிபோல் உனக்கு
ஒரு நொடிதான் நேரம்.

பெருமிதம் வேண்டாம்.
நீ இன்னும் உருவாகவே இல்லை.

கோபம் வேண்டாம்.
தூசித் துகள்கூட உன் அதிகாரத்துக்கு
உட்பட்டதில்லை.

துக்கம் வேண்டாம்.
அதனால் எதுவும் பயனில்லை.

புகழ் அழைத்தால் விலக்கி நட.
ஒரு கால்தடத்தையும்
விட்டுப் போகாதே.

கைகளைப் பயன்படுத்தவே வேண்டாம்
அவை எப்போதும்
துன்பம் செய்வது பற்றியே சிந்திக்கும்.

மகத்துவத்தைத் துறந்துவிடு.
மகத்துவமடைய வேறே வழியில்லை.

ஆற்று மீன் ஆற்றில் கிடக்கட்டும்.
பழம் மரத்தில் இருக்கட்டும்.

உறுதியானது ஒடியும்.
மென்மையானது நீண்டு வாழும்.
பல் நடுவே நாக்கு போல்.

ஒன்றும் செய்யாதவனுக்கே
எல்லாம் செய்ய முடியும்.

படி கடந்து போ.
உனக்காகக் காத்திருக்கிறது
இன்னும் உருவாகாத விக்கிரகம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆனந்தம். பரமானந்தம்.

இந்தக் கவிதையின் ஆழமும், எளிமையும் ஒரு நதியையும், தஞ்சாவூர்க்கவிராயரின் கவிதைகளையும் நினைவுபடுத்துகிறது.

இந்தக் கவிதை இனி நம் சொத்து.

20.7.12

பேச்சு




எல்லா இடங்களிலும் 
ஒருவனால் பேச முடிவதில்லை.

பேச நினைக்கும் இடங்களில்
இரைச்சல் மிகுந்தோ
பேரமைதியாகவோ
தடை செய்யப்பட்டோ 
பேச முடியாது போகிறது.

பேச ஆசைகொள்ளும்
நிலா கசியும் நள்ளிரவில் -

நிசப்தம் பாயும்
நூலக அலமாரிகள் இடையே - 

கிளர்ச்சியில் தோய்ந்த 
கலவிக்குப் பின்னே -

கண்ணீர் நனைத்த 
ஒரு சாவின் வலியால் -

ஏதோ ஓர் ஆசிரமத்தின்
தியானத்தின் பரவசத்தில் -

பேச முடியாது போகிறது.

யாருமற்ற தனிமையிலோ -
அவமானத்தின் பெரும் பளுவால் -

பதட்டத்தாலோ தயக்கத்தாலோ -
வசீகரத்தாலோ மறதியாலோ -
பேசமுடியாது போகிறது.

ஒரு தோல்விக்குப் பின்னே -
ஏதோ காரணமற்ற சினத்தால் - 
நியாயமற்ற சில பொய்களால் -
பல நேரங்களில் பேச முடிவதில்லை.

எல்லாம் அமையும்போது 
பேச எதுவுமில்லாது போய்விடுகிறது 
இறுதியாய்.

16.7.12

தக்ஷிணாயனத்தைக் காணவில்லை.

என்னோட பாட்டி அடிக்கடி சொல்லும் வாக்யம்.

“ஏற்கெனவே மாமியார் பேய்க்கோலம். அதிலயும் கொஞ்சம் அக்கிலி பிக்கிலி.”

ஏற்கெனவே ரொம்பத் தயங்கி தயங்கி உள்ளே நுழையக்கூடிய ப்ளாக் இது. அதுலயும் முக்கி முக்கி எழுதின ஒரு அத்யாயம் யார் கண்ணுலயும் மூணு நாளா படவேயில்லை. (டேஷ்போர்டில் வெளியாகவில்லை).

அதுக்கு சிகரமா நேத்தி ராத்திரி உள்ளதும் போச்சு லொள்ளக் கண்ணாங்கற மாதிரி வாசனும், ஹரணியும் எழுதின பின்னூட்டத்தோட ஒட்டுமொத்தமா அந்த 8வது அத்யாயம் (பவ) க்ளோஸ்.(ப்ளாக்கரின் சதி?)

திருப்பியும் வேதாளம் தன் முயற்சியைக் கைவிடாமல் உங்களையும் விடாமல் மறுபடியும் பதிப்பிக்கிறது தக்ஷிணாயத்தின் அந்த தொலைந்துபோன அத்யாயத்தை.

இந்த புலம்பலுக்குக் கீழே சமர்த்தாக உட்கார்ந்துகொண்டிருக்கும் அந்த 8வது அத்யாயத்தை வாசிக்கத் தவறியவர்கள் வாசிக்கலாம்.அல்லது தப்பித்தோம் பிழைத்தோமென்று ஓடலாம். 

நீதி: பட்ட காலிலேயே படும்.

இன்னிலேருந்து தக்ஷிணாயனம் பொறக்கறது. நானும் மனசுல ஒரு ப்ரதிக்ஞை எடுத்துண்டிருக்கேன். உத்தராயணம் வர்றதுக்குள்ள -அதாவது அடுத்த ஆறு மாசத்துக்குள்ள-இந்த நாவலை முடிச்சுடணும்னு.

15.7.12

8. பவ - தக்ஷிணாயனம்.



கைடர்யம், பூதி, எள் இவற்றைக் கொண்டு தயாரித்த தைலம் பைத்தியத்தைப் போக்கும். இதை மூக்கின் வழியாகச் செலுத்த வேண்டும்.

ஞாயல், நக்தமாலை மரங்களின் இலை, துளிர், பட்டைகளைக் கொண்டு தயாரித்தது குஷ்டத்தைப் போக்கும்.

ஞாயல், மஞ்சிஷ்டை, தகரம், லாஷா, மதுகம், மஞ்சள், தேன் இவற்றினால் தயாரிக்கப்பட்டது கயிற்றால் இறுக்கிக் கட்டியதாலோ, நீரில் அமிழ்த்தியதாலோ, விஷத்தாலோ, அடித்ததாலோ, உயரத்திலிருந்து கீழே விழுந்ததாலோ நினைவிழந்தவர்களுக்கு நினைவை வரவழைக்கும்.

- அர்த்தசாஸ்த்ரம் - பாகம் 14 - அத்யாயம் 4.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிவசைலம் கையால் ஒரு தரம் மருந்து சாப்பிட்டவன் அதற்குப் பின்னால் மருந்து சாப்பிடத் தேவையே இருக்காது. அவரை மிகவும் நேசிப்பவர்களும், வெறுப்பவர்களும் ஒரே குரலில் சொல்லும் கருத்து இது. ஒரு தரம் என்பது ஒரு தரம்தான். அவரிடம் போவதற்கு நேரம் காலம் அமைய வேண்டும் என்று எல்லோரும் சொல்லிக்கொள்வதுண்டு.

எல்லோரையும் போல அல்லோபதி மருத்துவராகவே தன் வாழ்க்கையைத் துவங்கினாலும் வெகு சீக்கிரமே தான் கற்றது அத்தனையும் பயனில்லாத சுமை எனவும், இந்தியர்கள் எந்தத் துறையிலும் சொல்லிவிடாததை வேறு யாரும் சொல்லிவிடவில்லை எனவும், கல்வி என்பது சுவர்களுக்கு வெளியே பரவிக்கிடப்பதைத் தான் தாமதமாகப் புரிந்துகொள்ள நேர்ந்ததாகவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்வார் சிவசைலம்.

ஒரு நாள் ஒரு கண்ணாடிவிரியன் கடித்த இரண்டாவது நிமிடம் ஒரு ரேக்ளா வண்டியில் கிடத்தப்பட்ட ஆறுமுகம் சாகக் கிடக்கையில் சிவசைலத்தின் முன் கொண்டுவரப்பட, அவன் கைவிரல் நகத்தைப் பார்த்த சிவசைலம் முணுமுணுத்தபடியே ஒரு மூலிகையின் சாற்றை ஆறுமுகத்தின் காதுக்குள் செலுத்த அவனைக் கடித்த கண்ணாடிவிரியன் கதறியபடி வந்து செலுத்திய விஷத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

அவர் கொடுத்த மூலிகையின் உபரி உத்வேகத்தால் குணமடைந்த ஆறுமுகம், தன் நிழல் விரட்ட விரட்ட தான் கொண்டுவரப் பட்ட ரேக்ளா வண்டியை விடவும் மிக வேகமாக ஓடியே வீடு வந்து தனக்கு உண்டான அபூர்வமான பசியை விரட்டி சாப்பிட்டுமுடித்துக் கைகழுவும் போது, ஆறுமுகத்தோடு போட்டிபோட்டு அத்தனை வேகவேகமாய் ஓட்டப்பட்ட மாடுகள் காலிலும் வாயிலும் ரத்தம் கசியக் கசிய அப்போதுதான் வீட்டை அடைந்தன.

மாதம் ஒருமுறை பௌர்ணமியன்று நாட்டாண்மை தீர்ப்பளிக்கும் நாட்களில், குறித்த நேரத்துக்கு முன்னமே கூட்டத்துக்கு வந்து சேரும் ஊர்ப்பெரியவர்கள் சிவசைலத்தைப் பற்றிப் பேச நேர்கையில் ஆறுமுகத்தின் ரத்தம் கசிந்த மாடுகளின் கதையைப் பேசாது விட்டதாக தனக்கு நினைவில்லை என்று குணசேகரன் தன் நண்பனிடம் சொன்னான். ஒரு முறை ஏதோ நினைவின்றி அந்தக் கதை பேசப்படாது போக முழுநிலவு உதிக்காது போனது.

அன்றைய இரவு இருள் நிறைந்த அமாவாசையாகப் போனது கிருத யுகத்தில் நான்கு முறைகளும், திரேதா யுகத்தில் மூன்று தடவைகளும், துவாபர யுகத்தில் இருமுறைகளும், கலியுகத்தில் ஒரே முறையும் நிகழ்ந்த அதிசய சம்பவம் என்றும் அவன் சொன்னான்.

சிவசைலத்தின் அணுகுமுறை அவரை ஒரு மருத்துவராய் எல்லோர் கண்ணுக்கும் காட்டாது. அவரே ஒரு நோயாளி போலக் காட்சியளிப்பார். என்னென்ன வியாதிகளோடு அவரைப் பார்க்க வந்திருப்பவர்கள் இருக்கிறார்களோ அவர்களைப் போல அவரும் உருக் கொண்டுவிடுவார். அதனால் சிவசைலம் ஒரு சுவரில் ஆணி அடித்து மாட்டப்படாத நிலைக்கண்ணாடி என்று மேலே நான்காவது பத்தியில் சொல்லப்பட்ட அதே ஊர்ப்பெரியவர்கள் சொல்வார்கள்.

மனநிலை சரியில்லாத சிலர் அவரிடம் வந்து அமர்ந்து சிகிச்சை பெறுவது ஒரு நாடகக் காட்சி போல இருக்கும். எதிரில் வந்தமரும் நோயாளியிடம் அவர் எதுவும் கேட்காமல் உற்றுப் பார்த்தபடியே இருப்பார். அவர்கள் இந்த நிலையை அடையக் காரணம் சுற்றியிருப்பவர்களின் அளவுக்கதிகமான சம்பாஷணைகளே என்றும், மெதுவாய் அவர்களுக்குள் நிரம்பியிருக்கும் அத்தனை சொற்களும் வடியும் வரை காத்திருப்பதுதான் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் முதல்படி என்றும், அவர்களுக்குள் மறுபடி நிரப்பப் படவேண்டியது அழகான நிசப்தம் மட்டுமே என்பதை நோயாளியின் உற்றார்கள் உணர்வது சிகிச்சையின் இரண்டாவது படியெனவும் சிவசைலம் சொல்வதுண்டு.

இப்படி சொற்கள் எல்லாம் வடிந்தபின் நோயாளியைப் படுக்கச் சொல்லி ஒரு மூலிகைத் தைலத்தை உடல் முழுதும்பூசி  கால்கள் இரண்டையும் மெதுவாக அமுக்கி விடுவார். அப்போது நோயாளியின் உடல் நிவாரணத்தின் கதிர்களால் மின்னுவதை ஆஸ்ப்ரின், மெட்டாசின், டோலோபார், ஃப்ரூபென் என்று -தன் நாய்க்குட்டிகளுக்கு இடப்பட்ட செல்லப்பெயர்களை உச்சரிக்கும் ஸ்வபாவத்துடன்- தீவிரமாக விழுங்கியபடி இருக்கும் மிகச் சாதாரண அடித்தட்டு வியாதியஸ்தர்கள் கூடக் கண்டு வியக்கமுடியும்.  

அதன் பின் நோயாளி பேச ஆரம்பிப்பார். நோயாளி தன் கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் நடுவே தட்டாமாலை சுற்றத் துவங்கியபின் சிவசைலம் சின்னச் சின்ன கேள்விகளைப் போட்டு பெரிய பெரிய திமிங்கிலங்களைக் கரை சேர்ப்பார். 

நோயாளியின் மனதில் ஏதோ ஒரு நாள் மாலையில் வீசிய காற்றில் மிதந்துவந்த மிக நுண்ணிய அவமானத்தின் துகள்களோ அல்லது தோல்வியின் கறையோ யாரும் கவனியாது  படிந்திருக்கஅதற்கு மேல் அதற்கும் மேல் என்று கொட்டிய சொற்கள் ஒரு பெரும் புற்றாய் வளர்ந்து போனதையும், மெதுமெதுவே புற்றைக் கரைத்து மனதின் அடிமட்டத்தில் ஒளிந்து கிடந்த ம்ருதுவான அந்தத் துகள்களை வெளியில் எடுப்பதும், கறைகளை நீக்குவதும்தான் தன் சிகிச்சை எனவும் சொல்வார். 

இதைத் தாண்டி வேறெந்த மருந்தும் கொடுக்கத் தேவையில்லை என்றும் ஆணித்தரமாக சிவசைலம் சொல்வது லக்ஷக் கணக்கில் பணத்தைச் செலவு செய்து தாளில் செய்த பட்டத்தை வாங்கியபின் ராப்பகலாய் பெரும் வசூல் வேட்டையில் மும்முரமாய் இருக்கும் எந்த நவீன மருத்துவருக்கும் புரிந்ததில்லை. 

சிகிச்சைக்குப் பின் இலைகளின் ஓசையும், ஓடும் நீரின் ஓசையும் மட்டுமே  நன்கு கேட்கும் ஏதாவது ஒரு தபோவனத்துக்கோ சோலைக்கோ மலைப்ரதேசத்துக்கோ கூட்டிச்சென்று ஒருவாரம் தங்கி அவருக்கு விருப்பமானவற்றைப் பேசி கலகலப்பூட்டித் திரும்பினால் எல்லாம் அதனதன் இடத்துக்குத் திரும்பும் என ஆலோசனை சொல்வார். 

அவர் பெயரை மனோதத்துவத் துறை, முடநோக்கியல் துறை, அறுவை சிகிச்சைத் துறை, ஹ்ருதயவியல் துறை, சிறுநீரகத் துறை, மகப்பேறுத் துறை போன்ற ப்ரபலமான எந்தத் துறையின் கீழ் கொண்டுவருவது என்று ஒருமுறை ஜஸ்ட் டயல், யெல்லோ பேஜஸ் போன்ற நிறுவனங்களின் தகவல் தொகுப்பாளினிகள் விசாரித்தபோது, நகரில் உள்ள பூங்காக்களின் பட்டியலோடு தன் மருத்துவ நிலையத்தின் பெயரை இணைக்குமாறும், உண்மையில் பூக்களும் காற்றும் தரும் இளைப்பாறல் தன் மருத்துவசாலைக்குள் நிரம்பியபடி இருப்பதால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் சொல்ல, மிக வித்யாசமாக நகரின் 68 பூங்காக்களுடன் சிவசைலத்தின் மருத்துவ நிலையத்தின் பெயரும் இணைக்கப்பட்டு மொத்தம் 69 பூங்காக்கள் என்பதாய் முடிந்தது அந்த வருட தகவல் தொகுப்பு. 

இதில் வேடிக்கை என்னவென்றால் சமயங்களில் பெரிய பெரிய குடும்பங்களோடு வரும் மக்கள் தங்கள் குழந்தைகள் சறுக்கி விளையாடவும், ஆடி மகிழ ஊஞ்சல் மற்றும் சீசாப் பலகைகள் இருக்கும் என்று தேடி சிவசைலத்தின் மருத்துவ சாலைக்கு வந்ததாகவும் ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரு ஓலைக் குடிசையுடன் தென்படும் இவ்விடம் ஒரு துறவியின் மடாலயம் போல இருப்பது ஆச்சர்யம் அளிப்பதாகவும் குறிப்பிட்டு தாங்கள் இளைப்பாறிய பின் உண்ண எடுத்து வந்த வந்த பெரிய பெரிய பாத்திரங்களில் மறைந்திருக்கும் சித்ரான்னங்களைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு மற்றுமொரு பூங்காவில் பயத்துடனும், தயக்கத்துடனும் நுழைவதும் நடப்பதுண்டு. 

சிவசைலத்துடன் ஒரு நாள் தங்கும் அனுபவம் எல்லோருக்கும் வாய்க்காது. குணசேகரனுக்கு அது வாய்த்தது. குணசேகரன் ஒரு பேட்டியாளர். அநேகமாக தமிழகத்தின் எல்லாப் ப்ரமுகர்களையும் பேட்டி கண்டுவிட்ட சாதனையாளர். இதுவரை வலையில் விழாத நபர் இந்த சிவசைலம்தான். பலமுறை முயற்சி செய்த போதும் தான் பேசும் நிலையில் இல்லை. இப்போதெல்லாம் வாயைத் திறந்தால் தனக்கு போதேந்திர சத்குருவின் பாடல்களோ, கபீர்தாஸரின் பஜன்களோதான் வருவதாகவும் சொன்னார் சிவசைலம்.

தான் பேட்டியெடுத்த இசை மேதைகள் பலரும் பேட்டியின் போது பேசவே செய்தார்கள் எனவும், சிவசைலத்தின் வாயிலிருந்து பாடல்கள் வெளிப்படுவது நிற்கும் போது தனக்குத் தெரிவித்தால், தான் எந்த மூலையில் இருந்தாலும் சிவசைலத்தின் முன்னே வந்து சேர்ந்து விடுவதாயும் குணசேகரன் தெரிவித்தார்.

சிவசைலமும் பாடல்கள் நின்றுபோன தகவலை ஒரு பகலில் குணசேகரனிடம் கொண்டு சேர்த்து விடும்படிக் கேட்டுக்கொள்ள, அவரின் உதவியாளர் மூலம் நாளந்தாப் பல்கலைக் கழகத்தின் தலைமை குருவுடன் உரையாடிக்கொண்டிருந்த குணசேகரனிடம் தகவல் சென்றடைய எதிர்வரும் ப்ரதோஷ காலத்தில் அவரைச் சந்திப்பதான பதிலுடன் பேட்டிக்கான அஸ்திவாரம் அமைந்தது.

அந்தப் பேட்டியை அப்படியே தந்துவிடுகிறேன். படித்துப் பாருங்கள்.

கு.சே: நீங்கள் பிறந்தது எந்த ஊர்? உங்களின் ஆளுமையில் ஆதிக்கம் செலுத்தும் மண் எது?

சி.சை:  கல்லிடைக்குறிச்சி. திருநெல்வேலி.

கு.சே: நீங்கள் கொஞ்சம் விரிவாக பதில் சொன்னால் பேட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

சி.சை: உங்கள் கேள்வியிடம்தான் இருக்கிறது பதில்களை வரவழைக்கும் சாமர்த்தியம்.இன்னுமொரு விஷயம். என் தொழில் சார்ந்த கேள்விகளை நான் விரும்புவதில்லை. அவை என் தவம். பொதுவான கேள்விகளை நான் விரும்புகிறேன்.

கு.சே: நீங்கள் ஒரு மனோதத்துவ மருத்துவரா? தத்துவ அறிஞரா?

சி.சை: நான் துறவும் தத்துவமும் விரும்பும் மருத்துவர். உண்மையில் எல்லோரிடமும் வியாதியும் நலமும் இணைந்தேதான் இருக்கின்றன. ஆனால் அதை நாம் உணர்வதுமில்லை. ஒப்புக்கொள்வதுமில்லை.

கு.சே: உங்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவம் ஏதுமுண்டா?

சி.சை: என்னடா எடுத்த எடுப்பிலேயே இந்தக் கேள்வி வந்திருக்கவேண்டுமே என எதிர்பார்த்தேன். மறக்கமுடியாத சம்பவங்கள் எதுவும் கிடையாது. எனக்கு மறதி அதிகம். தவிர நான் சம்பவங்களை நினைவில் வைத்துக்கொள்ள முயல்வதில்லை.

கு.சே: சரி. உங்களுக்கு மிகவும் பிடித்த இரு விஷயங்களோடு ஒரு தீவில் ஒரு வருடம் இருக்கவேண்டும் என்று சொன்னால் எதை எடுத்துச் செல்ல விரும்புவீர்கள்?

சி.சை: மஹாபாரதம், திருக்குறள்.

கு.சே: உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகை?

சி.சை: நான் அதிகம் சினிமா பார்ப்பதில்லை.ஆனாலும் கல்லாப்பெட்டி சிங்காரம், முனுசாமி மற்றும் நீலுவை சில சந்தர்ப்பங்களில் ரசித்திருக்கிறேன்.

கு.சே: பிடித்த இசை?

சி.சை: பாலசந்தரின் வீணை, எங்கள் கிராமத்தில் என் சிறு வயதில் அபாரமாக நாதஸ்வரம் வாசித்த பொன்னையா பிள்ளை, யாருக்கும் தெரியாத வயலின் மேதை ஷண்முகசுந்தரம் ஆகியோரைப் பிடிக்கும்.

கு.சே: உங்களுக்கு சிறு வயதில் தற்கொலை செய்து கொள்வதற்கான ஒரு முயற்சி அமைந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பற்றி?

சி.சை: அது பற்றிக் கூற எதுவுமில்லை. தவிரவும் பிறரின் அறைக்குள் எட்டிப் பார்க்கும் சபலத்தை உங்களைப் போன்றவர்கள் கைவிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கு.சே: விரும்பி சாப்பிடும் பானம்?

சி.சை: பதனீர், இளநீர். ஆனால் இப்போது எதுவும் குடிப்பதற்கான சுவையோடு இல்லை.

கு.சே: சாப்பிட ஆசைப்படுபவை:

சி.சை: நுங்கு, வேகவைத்த பனம்பழம், தேனில் ஊறிய பலாப்பழம்.

கு.சே: உங்களால் மிகவும் விரும்பி செலவிடப்படும் பொழுதுகள் எவை?

சி.சை: நோயாளிகளின் மனது திறந்து கொள்ளும் தருணங்கள், ஓடும் நீரில் இரு கால்களும் நனைய உட்கார்ந்திருப்பது, யானையை வேடிக்கை பார்ப்பது மற்றும் ரயில் பயணம்.

கு.சே: மழையில் நனைவது பிடிக்குமா?

சி.சை: நல்ல கேள்வி. பிடிக்கும். சில போது குடையோடு செல்வதும் பிடிக்கும்.

கு.சே: ஒரு நாளில் எந்த நேரம் மிகப் பிடிக்கும்? பிடிக்காது?

சி.சை: பிடித்தது சூர்யோதயத்துக்கு முந்தைய இரு மணி நேரம்.மிகவும் துயரமானது சூர்யாஸ்தமனமும் இருளும் சேரும் அந்த ஒரு மணி நேரம். அந்த நேரம் தனிமையில் இருப்பதும் பிடிக்காது.

கு.சே: செல்லப் பிராணிகள் வளர்ப்பது பிடிக்குமா?

சி.சை: நாய்கள் வளர்ப்பது பிடிக்கும். நம்மிடம் மிக அற்புதமாகப் பேசத் தெரிந்தவை நாய்கள்தான். நாய்கள் கொஞ்சுவதையும், அவை புகார் அளிப்பதையும் பார்த்திராதவன் துர்பாக்யசாலி.

கு.சே: கடலில் கால் நனைப்பது பிடிக்குமா?

சி.சை: பிடிக்காது. காலை அரிக்கும். ஆனால் நண்டுகள் ஓடி ஒளிந்துகொள்வதைப் பார்க்கப் பிடிக்கும். அதிக நேரம் கடற்கரையில் இருப்பதையும் நான் விரும்புவதில்லை. உப்புக்காற்றில் கண்ணாடிகள் மாசடைந்து விடுகின்றன.

கு.சே: அதிகமாக பொதுமேடைகளில் பார்க்க முடிவதில்லையே?

சி.சை: ஒலிபெருக்கியின் முன்னால் நிற்பதைப் போல பயங்கரமான காட்சி வேறெதுவும் இல்லை. தவிர பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை நான் நம்புகிறேன்.

கு.சே: உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?

சி.சை: உண்டு. நம்பிக்கைதான் வாழ்வை சுவாரஸ்யமாக்குகிறது. தத்துவம், கவிதை, இசை, ஓவியம், சிற்பம், நாடகம் போன்ற எல்லாக் கலைகளும் நம்பிக்கையின் கைகளைப் பிடித்தபடிதான் நடக்கிறது. இருளை விட ஒளி என்னை ஈர்க்கிறது.

கு.சே: இன்னும் கொஞ்சம் விளக்கமுடியுமா?

சி.சை: இல்லை. இயலாது. இது அவரவர் தனிப்பட்ட உள் அனுபவம். எனக்கு ஒரு அகலில் அசையும் சுடர் போதும். சிலருக்கு திருவண்ணாமலையின் தீபஜோதி வேண்டும்.

பேட்டி நடந்துகொண்டிருந்தபோதே வாசலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு நோயாளியுடன் சிவசைலத்தின் மருத்துவ சாலையை அடைந்தார்கள் சிலர். குணசேகரனிடம் எதுவும் சொல்லாமலே மிக வேகமாக சிவசைலம் விரைந்தபோது அந்த நோயாளி இறந்துபோனார்.

இறந்தவரை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் உயிர்ப்பிக்க மருந்து இருப்பதாக அவர்களிடம் சிவசைலம் சொல்லிக்கொண்டிருந்தபோது வாசலில் பெரிதாக மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.

12.7.12

இன்றைய ஆனந்த விகடனில் “யானைக்கு உவ்வா”

காலொடிந்த குட்டி யானை
வாலறுந்த குரங்கு
இறக்கை முறிந்த கிளி

எல்லோருக்கும்
பூசப்பட்டது ஒரே களிம்பு.

யாரும் சத்தம்
போட வேண்டாம்.
கொஞ்சம் அமைதி.

வலியால் கண் மூடிக்கிடக்கும்
அவற்றின் நெற்றியில் ஓர் முத்தம்.

பரிவோடு மடியில் கிடத்தி
ஆதுரத்தோடு மென் தட்டல்கள்.

’எல்லாம் சரியாப் போச்சு. 
வாங்க விளையாடலாம்’

குட்டிப்பெண்ணின் உத்தரவில்
சிகிச்சை முடியும் முன்பே
பறக்கவும் நடக்கவும் தொடங்கின
முறிந்தும் உடைந்தும்
துடித்தவை.

- நன்றி- ஆனந்த விகடன் - 18 ஜூலை, 2012.

10.7.12

ஸ்ரீ ருத்ரம் - யஜூர்வேதத்தின் சாரம்-II


இந்த இடுகையின் முதல் பகுதியை வாசிக்க இந்த இணைப்பைச் சுட்டவும்.

http://sundargprakash.blogspot.in/2012/07/blog-post.html

பெரியவராயும், சிறியவராயும்,
ஆதியில் ஹிரண்யகர்ப்பராய்த் தோன்றியவராயும்,
யுகங்களின் இறுதியில் காலாக்னியாய்த் தோன்றவிருப்பவராயும், இடைப்பட்ட காலத்தில் தேவர், மானுட்ர் வடிவங்களில் தோன்றியவராயும், நடுவயதினராயும், பக்குவமடையாத இளம் வயதினராயும்,
பிராணிகளின் இடைப்ரதேசத்திலிருந்து பிறப்பவராயும்,
மரங்களின் வேர்களிலிருந்து கிளைகளாய்த் தோன்றுபவராயும்,
இருவினை தொடரும் மானிட உலகில் பிறப்பவராயும்,
மற்ற ஜங்கமப் ப்ரபஞ்சமாய் உள்ளவராயும்,
யமலோகத்தில் பாபிகளை தண்டிப்பவராயும்,
ஸ்வர்க்க லோகத்தில் ஆனந்தமளிப்பவராயும்,
பயிர் நிறைந்த வயல்களில் இருப்பவராயும்,
களத்தில் இருப்பவராயும், வேதமந்திரங்களால் போற்றப்படுபவராயும்,
வேத முடிவில் வீற்றிருப்பவராயும், வனத்தில் மரங்களாய் இருப்பவராயும், புதர்களுக்கிடையே செடி கொடிகளாய் இருப்பவராயும்,
ஒலி வடிவில் இருப்பவராயும், எதிரொலி வடிவில் இருப்பவராயும் உள்ளவரான உமக்கு வணக்கம். 

விரைந்து செல்லும் சேனை வடிவில் இருப்பவராயும், விரைந்து செல்லும் தேரின் வடிவில் இருப்பவராயும், அரக்கர் வடிவில் இருப்பவராயும், அதர்மவான்களை அழிப்பவராயும், கவசமணிந்த வடிவினராயும், தேருக்குள் தேர்ப்பாகனைக் காக்கும் இடம் ( ரக்ஷண ஸ்தானம்) அளிக்கும் தன்மையினராயும், தலைப்பாகை அணிந்த வடிவினராயும், மந்திரத்தால் காக்கப்பட்ட வடிவினராயும், புகழ் மிக்கவராயும், கீர்த்திபெற்ற சேனையுள்ளவராயும், பேரி வாத்யத்தின் சப்த வடிவினராயும், சப்தம் எழுப்பும் கோல் வடிவிலிருப்பவராகவும், போரில் புறங்காட்டாதவராகவும், எதிரிகளின் ரகசியங்களைப் பரிசீலிப்பவராயும், தூதராயும், ஏவல்காரராயும், வாளேந்தியவராயும், அம்பறாத் துணியுடையவராயும், கூரிய பாணங்களையுடைவராயும், ஆயுதங்களையுடையவாராயும்
உள்ளவரான உமக்கு வணக்கம்.

சிறந்த ஆயதமுடையவராயும், சிறந்த வில்லையுடையவராயும், ஒற்றையடிப்பாதையிலும், நல்ல பாதையிலும் செல்லுபவராயும்,
கால்வாய் நீரிலும், அருவி நீரிலும் இருப்பவராயும்,
நதியின் நீரிலும், குளத்தின் நீரிலும் இருப்பவராயும்,
கிணற்று நீரிலும், சுனை நீரிலும் இருப்பவராயும்,
மழையிலும், மழையற்ற இடத்திலும் இருப்பவராயும்,
மேகத்திலும் மின்னலிலும் இருப்பவராயும்,
நிர்மலமான சரத்கால வானத்திலும்,
வெயிலின் இடையே பொழியும் மழையின் வடிவிலும் இருப்பவராயும்,
மழைக்காற்றின் வடிவிலும், கல்மாரியின் வடிவிலும் இருப்பவராயும்
உள்ளவரான உமக்கு வணக்கம்.  

மனையில் உள்ள பொருட்கள் தோறும் அந்தந்த வடிவில் உறைபவராயும்,
மனையைக் காக்கும் வாஸ்து புருஷராயும்,
உமாதேவியுடன் கூடியவராயும்,
உதயகாலச் சிவந்த சூரியனின் வடிவினராயும்,
உதித்தபின் சற்று சிவப்புக் குறைந்த ஒளியில் உறைபவராயும்,
இன்பத்தைக் கூட்டி வைப்பவராயும், பசுக்களைக் காப்பவராயும், விரோதிகளிடம் கடுமையாய் இருப்பவராயும், பயங்கரமாயிருப்பவராயும், எதிரிகளை முன்நின்று கொல்பவராயும், எட்டியிருந்து கொல்பவராயும், எல்லாவிடத்திலும் எதிரிகளைக் கொல்பவர்களின் வடிவிலிருப்பவராயும், சம்ஹார காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவராயும்,
கர்மங்களாகிய பச்சிலைகளையே கேசமாகக் கொண்ட
சம்சார வ்ருக்ஷ வடிவானவராயும்,
ப்ரணவ ஸ்வரூபியாய் இருப்பவராயும்  உள்ள உமக்கு வணக்கம்.

விஷயசுகமாகத் தோன்றுபவராயும், மோக்ஷ சுகமாய்த் தோன்றுபவராயும், பித்ருக்களின் வடிவில் நின்று இகலோக இன்பத்தையளிப்பவராயும், ஆசார்யர்களின் வடிவில் நின்று மோக்ஷ இன்பத்தையளிப்பவராயும்,
மங்கள வடிவினராயும், தன்னையடைந்தவரையும் சிவமயமாக்கும் அதிமங்கள வடிவினராயும், புண்ணிய தீர்த்தங்களின் வடிவினராயும், நதிக்கரைகளில் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்திகளின் வடிவானவராயும், சம்ஸார சாகரத்துக்கப்பால் முனிவர்களால் போற்றப்படுபவராயும், சம்ஸாரத்துக்கிடையில் வேண்டுவோர் வேண்டும் பயனையளிப்பவராயும், பாவத்தினின்று கரையேற்றும் மந்திர ஜப வடிவினராயும்,
சம்ஸாரத்தினின்று கரையேற்றும் தத்துவ ஞான வடிவினராயும்,
கர்மானுஷ்டானத்தின் மூலம் ஜீவனை சம்ஸாரத்தில் புகுத்துவிப்பவராயும், கர்ம பலனைப் புசிக்கும் ஜீவனுடன் இருந்து 
அவனைத் தூண்டுபவராயும் உள்ள உமக்கு வணக்கம்.

நதிக்கரையில் உள்ள இளம்புல்லிலும் நீரின் நுரையிலும் இருப்பவராயும், மணல் திட்டிலும், ஓடும் நீரிலும் இருப்பவராயும்,
களர் நிலத்தில் வசிப்பவர்கள் வடிவிலும் , வழிநடப்பவர்கள் வடிவிலிருப்பவராயும், சுக்கான் பூமியிலும், நல்ல இடங்களிலும் வசிப்பவர்கள் வடிவிலிருப்பவராயும்,
சடைமுடியுடையவராயும், பக்தர்களைக் காக்க முன்நிற்பவராயும், மாட்டுக்கொட்டிலிலும், வீட்டிலும் உள்ளவர்கள் வடிவினராயும்,
கட்டிலிலும் உப்பரிகையிலும் இருப்பவர்கள் வடிவினராயும்,
கல்முள் நிறைந்த காட்டிலும் குகையிலும் இருப்பவராயும்,
ஆழமான மடுவிலும் பனித்துளியிலும் இருப்பவராயும்,
தூசுகளிலும் புழுதியிலும் இருப்பவராயும்,
காய்ந்த கட்டையிலும் ஈரக்கட்டையிலும் இருப்பவராயும்,
கட்டாந்தரையிலும் புல் தரையிலும் இருப்பவராயும்,
பரந்த பூமியிலும் அழகிய அலைகளுடன் கூடிய நதியிலும் இருப்பவராயும், பச்சிலைகளிலும் உலர்ந்த சருகுகளிலும் இருப்பவராயும் உள்ள
உமக்கு வணக்கம்.      

ஆயுதம் எடுத்தவராயும், எதிரிகளைக் கொல்பவருமாயும், சிறிதும் பெரிதுமாய்த் துன்புறுத்துபவராயும், அடியாருக்கு செல்வத்தையளிக்கும் வடிவில் இருப்பவராயும், எல்லா தேவர்களின் இதயங்களிலும் இருப்பவராயும், தேவர்களின் இதயங்களில் அழிவில்லாத வடிவமுடையவராயும், தேவர்களின் இதயங்களில் இருந்துகொண்டு வேண்டுவோர் வேண்டுவதை அருளுபவராயும், தேவர்களின் இதயங்களில் இருந்துகொண்டு பாவங்களை அறவே ஒழிக்கும் வடிவினராயும், தேவர்கள் இதயங்களில் இருந்துகொண்டு எங்கும் ருத்ர கணங்களாய்ச் சஞ்சரிப்பவராயும் உள்ள உமக்கு வணக்கம்.

இதுவரை ஆறு முதல் ஒன்பதாம் அனுவாகம் வரையிலான பொருளைப் பார்த்தோம்.

”எவர் சிறியர் எவர் பெரியர் எவருறவர்
எவர் பகைஞர் யாது முனையன்றி யுண்டோ
இகபர மிரண்டிலு முயிரினுக்குயிராகி
எங்கு நிறைகின்ற பொருளே”

என்று தாயுமானவ ஸ்வாமி பாடுவது போல உட்கார்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும், தூங்கியபடியும், விழித்தபடியும், நின்றபடியும், ஓடியபடியும், தச்சர்களாயும், குயவர்களாயும், வேடர்களாயும், செம்படவர்களாயும், கள்வர்களாயும் என எல்லாமுமாய் அவரே இருக்கிறார். அற்பம் அற்பமன்று. அவரை ஆராதிக்க தும்பையைப் போலவே ஊமத்தையும் உதவும்.

ஆக இந்தப் ப்ரபஞ்சத்தின் எல்லா இயக்கமும், எல்லா இயக்கமின்மையும், எல்லா வினைகளும், இதுவும் அதுவும் எதுவும், எல்லா வடிவும் அவனேயன்றி வேறில்லை எனும் மிக எளிய சரணாகதி தத்துவத்தை அற்புதமான அனுபவமாக்கும் வழிதான் ஸ்ரீருத்ர பாராயணம். இதை காதுகளால் கேட்டபடியும், மனதால் உச்சரித்தபடியும் ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்வோருக்கு எல்லாவற்றையும் அளிப்பவரிடம் எதையும் வேண்டாத ஓர் உன்னத நிலை கிட்டட்டும்.  

இதன் சங்கிலி போல இணை பிரியாத அங்கமான சமகம் பற்றியும் அதன் பொருளையும் இன்னொரு இடுகையில் எழுதக் கடவுளின் அருளை யாசிக்கிறேன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...