12.2.14

தேவி காலோத்தரம் மற்றும் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம்


”தேவி காலோத்தரம்”, ”ஆன்மசாட்சாத்காரப் பிரகரணம்” இவை இரண்டும் இரு தொன்மையான நூல்கள். அவற்றிலிருந்து சில பார்வைகள்.

#######

வேர் எதுவுந் தான் பிடுங்க வேண்டாம் இலையினையும்
வேறுபடுத்தும் செயலும் வேண்டாமே - சீறி
இனாத செயவேண்டாம்  எவ்வுயிர்க்கும் பூவும்
அனாதரவாய்க் கிள்ள வேண்டாம்.

சுயமாகவே உதிர்ந்த தூமலர்கள் கொண்டே
செயக்கடவன் பூசை சிவனுக்கு - இயற்றியிடும்
மாரணம் உச்சாடனமுன் மற்ற வித்து வேடணமும்
பேருற்ற தம்பனமும் பின்.

இவை இரண்டும் "தேவி காலோத்தரம்" என்று அழைக்கப்படுகிற மிகத் தொன்மையான நூலில், சிவனுக்கும் உமைக்கும் இடையேயான உரையாடலின் மொழிபெயர்ப்பு.

சமஸ்க்ருதத்தில் இருந்து மொழிபெயர்த்து வெண்பாவாக இயற்றியவர் ரமண மகர்ஷி. இந்த இரு பாடலிலும் தனக்கான வழிபாடு எப்படி இருக்க வேண்டுமென ஈசனின் உத்தரவாய் இந்தப் பாடல்கள் இருக்கின்றன.

பாடலின் பொருள் புரியும்படியாய்த்தான் இருப்பதாய் நினைக்கிறேன்.

தன் பூசைக்கு வேரோ, இலையோ பிடுங்கப்பட வேண்டாம். எந்த ஓர் உயிருக்கும் கோபத்தினால் துன்பமளிக்கக் கூடிய செயல் எதையும் செய்ய வேண்டாம். மென்மையான மலர்களைச் செடியிலிருந்து கிள்ள வேண்டாம்.

தானாய் உதிர்ந்த மலர்கள் கொண்டு சிவனுக்குச் செய்யப்படும் பூசையே உகந்தது. இதை விட்டு மந்திர உச்சாடனங்களால் அழிவை உண்டாக்குதல், மந்திரப் ப்ரயோகத்தினால் ஏவுதல், விரட்டுதல், ஸ்தம்பித்துப் போகச் செய்யும் தம்பனம் செய்தல் சிவனுக்கு உகந்ததல்ல.

அஹிம்சை என்பதன் வேர் நீளும் தொலைவு மலைப்பானதுதான்.

########

மருத்துவ மனைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் இன்றைய துறவிகளின் மனநிலையை ஒப்புநோக்க "ஆன்ம சாட்சாத்பிரகரணம்" எனும் தொன்மையான நூலின் இரு பாடல்கள் துணை புரிகின்றன. 

"ஆன்ம சாட்சாத்பிரகரணம்" இது சிவன் முருகனுக்கு உபதேசித்த மிகத் தொன்மையான நூல். வடமொழியிலிருந்து தமிழில் வெண்பாவாக்கியது ரமண மகர்ஷி. 

மொத்தம் 62 பாடல்கள் கொண்ட இந்த நூலின் இரு பாடல்களை இப்போது பார்ப்போம். 

செல்லினும் நிற்கினு நித்திரை செய்யினும்
புல்லினும் சாக்கிர போசனநீர் - கொள்ளினும்
காற்று குளிர் வெய்யிற் கலந்திடுங் காலுமெவ்
வாற்றினுமெக் காலத்து மற்று.

[சென்றாலும், நின்றாலும், உறங்கினாலும், தழுவினாலும், விழித்திருந்தாலும், உண்ணுகையில் நீர் பருகினாலும், காற்று, குளிர், வெய்யில் எனத் தாக்கினாலும், வேறு எந்த இடையூறினாலும் எக்காலத்திலும் பாதிப்புற மாட்டான்.]

பயமும் வறுமைநோய் பற்றுசுர மந்த
மியைந்திடுங் காலத்து மேதுந் - தியங்கானே
யான்மநிட் டன்சாந்த னார்நிட் களனாகி
யான்ம திருத்தனா வான்.

[அச்சத்தாலும், வறுமையாலும், நோயாலும், சுட்டெரிக்கும் சுரத்தாலும், செரிப்பின்றி மந்த நோயாலும் அவதியுற்றபோதும், ஆன்ம நிட்டனாய் எதைக் கண்டும் கலக்கமுறாமல் நிலையாய் இருப்பான்.]

கருத்துகள் இல்லை:

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...